தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/படிப்படியாக மீண்ட ரிஷாப் பன்ட்: சோதனை டூ சாதனை பாதை

படிப்படியாக மீண்ட ரிஷாப் பன்ட்: சோதனை டூ சாதனை பாதை

படிப்படியாக மீண்ட ரிஷாப் பன்ட்: சோதனை டூ சாதனை பாதை


ADDED : ஜூன் 29, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: 'என்னால் மீண்டும் விளையாட முடியுமா'... இந்த கேள்வியை தான் கார் விபத்தில் காயமடைந்த சமயத்தில் டாக்டரிடம் முதலில் கேட்டுள்ளார் ரிஷாப் பன்ட். மனஉறுதியுடன் மீண்ட இவர், சதங்களாக விளாசி சாதனை படைக்கிறார்.

இந்திய அணியின் கீப்பர்-பேட்டர் ரிஷாப் பன்ட் 27. கடந்த 2022, டிச. 30ல் டில்லியில் இருந்து சொந்த ஊரான ரூர்கீக்கு (உத்தரகாண்ட்) காரை ஓட்டிச் சென்றார். நர்சன் கலான் கிராமம் அருகே 'டிவைடரில்' மோதிய கார் தீ பிடித்தது. சிலர் உதவியுடன் காரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ரிஷாப், அருகில் இருந்த டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இங்கு ரிஷாப் மீண்டு வந்த அதிசயம் பற்றி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் தின்ஷா பர்திவாலா கூறியது:

ரிஷாப் உயிர் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டம். மருத்துவமனையில் சேர்த்த போது, 'என்னால் மீண்டும் விளையாட முடியுமா' என்ற கேள்வியை தான் முதன் முதலில் கேட்டார். அவரது தாயார்,'என் மகனால் இனி நடக்க முடியுமா' என கேட்டார். வலது முழங்கால், கணுக்கால் உட்பட உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு இருந்தது. காருக்குள் இருந்து அவரை வெளியே இழுத்ததால், கழுத்தில் இருந்து முழங்கால் வரை தோல் பாதிக்கப்பட்டு இருந்தது. காரின் உடைந்த கண்ணாடி குத்தியதில் முதுகு பகுதியில் உள்ள தோல், சதை பகுதிகள் சிதைந்து இருந்தன.

'ஆப்பரேஷன்' வெற்றி: முழங்கால் மூட்டு விலகி, அனைத்து தசைநார்களும் உடைந்துவிட்டால், நரம்பு அல்லது ரத்த நாளம் காயமடைய வாய்ப்பு உண்டு. ரத்த நாளம் பாதிக்கப்பட்டால், 4-6 மணி நேரத்தில் ரத்த ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். தவறினால், காலை இழக்க நேரிடும். நல்லவேளை ரிஷாப்பிற்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்ட போதும், ரத்த நாளம் பாதிக்கப்படவில்லை. 2023, ஜன. 6ல் அவரது வலது முழங்காலில் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தேன். கிழிந்திருந்த தசை நார்கள், விலகி இருந்து மூட்டு எலும்பு என அனைத்தையும் சரி செய்தேன்.

விரைவாக மீண்டார்: அறுவை சிகிச்சை முடிந்து பல வாரங்களுக்கு அவரால் பல் கூட துலக்க முடியவில்லை. தோல் அதிகளவில் இழந்ததால், கைகள் வீங்கியிருந்தன. இரு கைகளையும் அசைக்க முடியவில்லை. மனஉறுதியுடன் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டார். பிறர் உதவி இல்லாமல் தண்ணீர் குடிக்க துவங்கினார். நான்கு மாதத்தில் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முயற்சித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்ததும்,' நீங்கள் உயிரோடு இருப்பது, கால்களை மீட்டது என இரு அதிசயம் நடந்துள்ளன. கிரிக்கெட் களத்தில் மீண்டும் விளையாட தயார் செய்தால், மூன்றாவது அதிசயம் அரங்கேறும்' என்றேன். இதற்கு குறைந்தது 18 மாத காலம் தேவைப்படலாம் என கணித்தேன். 2023ல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சியை துவக்கினார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக மீண்டார். கடினமாக பயிற்சி செய்து கிரிக்கெட் களத்திற்கு மீண்டும் திரும்பினார்.இவ்வாறு அவர் கூறினார்.

இது தேவையில்லை

காயத்தில் இருந்து மீண்ட ரிஷாப், 450 நாளுக்கு பின் பிரிமியர் தொடரில் டில்லி அணிக்காக முதல் ரன் எடுத்தார். 523வது நாளில் இந்திய அணிக்கு திரும்பினார். 538வது நாளில் 'டி-20' உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார். 635வது நாளில் டெஸ்ட் அணிக்கு (எதிர், வங்கம், 2024, சென்னை) திரும்பினார். இப்போட்டியில் சதம் அடித்தார்.

சமீபத்திய லீட்ஸ் டெஸ்டில் (எதிர், இங்கி.,) இரு சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என சாதனை படைத்தார் ரிஷாப். முதல் இன்னிங்சில் சதம் அடித்த தருணத்தில் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது பற்றி டாக்டர். பர்திவாலா கூறுகையில்,''ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றவர் ரிஷாப். இதனால் தான் சுலபமாக குட்டிக்கரணம் அடிக்கிறார். இருப்பினும் இது தேவையில்லாத செயல்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us