ADDED : ஆக 11, 2026 11:13 PM

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை அணி, 45 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
திண்டுக்கல், நத்தத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
திருச்சி அணிக்கு கே.ராஜ்குமார் (13), ஜாபர் (4), கவுசிக் (10) ஏமாற்ற, 11.2 ஓவரில், 71/4 என திணறியது. சஞ்சய் யாதவ் 17 ரன் எடுத்தார். கேப்டன் சுரேஷ் குமார் 32 பந்தில் 58 ரன் எடுத்த நிலையில், ஹரிஷ் பந்தில் வீழ்ந்தார்.
பின் வரிசையில் ஆர்.ராஜ்குமார், சிக்சர் மழை பொழிய ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர், 19 பந்தில் 45 ரன் (5x6, 2x4) எடுத்தார். திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் சச்சின் ரதி 3, ஹரிஷ் 2 விக்கெட் சாய்த்தனர்.
டேவிட்சன் அபாரம்
பின் களமிறங்கிய நெல்லை அணியின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. ஆதிஷ் 23, ரித்திக் 18 ரன் எடுத்தனர். கேப்டன் சோனு யாதவ் 12 ரன் எடுத்தார். முகிலேஷ், 45 பந்தில் 63 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
நெல்லை அணி 18 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது.
திருச்சி சார்பில் டேவிட்சன் அதிகபட்சம் 4 விக்கெட் வீழ்த்தினார்.
