ADDED : செப் 07, 2026 11:28 PM

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை தனிநபர் பிரிவில் ஷீத்தல் தேவி பைனலுக்கு முன்னேறினார்.
ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் ('ஸ்டேஜ்-3') நடக்கிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து 109 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று தனிநபர் பிரிவு போட்டிகள் நடந்தன. 'காம்பவுண்டு' பிரிவில் நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் ஷீத்தல் தேவி 19, பங்கேற்றார். பிறக்கும் போதே இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி, காலிறுதியில் 145-142 என பிரிட்டனின் ஜெசிக்காவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சரிதா, 141-134 என பிரான்சின் ஜூலியை வென்றார்.
அரையிறுதியில் ஷீத்தல், சரிதா மோதினர். 5 செட் முடிவில் ஷீத்தல் 145-143 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
'ரீகர்வ்' ஏமாற்றம்
பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராஜ்ஸ்ரீ, 4-6 என சீனாவின் லியாங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பாவ்னா, 'ஷூட் ஆப்' முறையில் ஈரானின் சோமயாவிடம் வீழ்ந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாவ்னா-ராஜ்ஸ்ரீ மோதவுள்ளனர்.
இந்தியா அபாரம்
ரீகர்வ் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி, 6-0 என இந்தோனேஷியாவை சாய்த்தது. நாளை தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
காம்பவுண்டு அணிகளுக்கான அரையிறுதியில் ஷீத்தல் தேவி, தோமன் குமார் இடம் பெற்ற இந்திய அணி, 'ஷூட் ஆப்' முறையில் சீனாவிடம் வீழ்ந்தது. அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை, ஈராக்கை சந்திக்கிறது.
தவிர, பாரா காம்பவுண்டு ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், தோமன் குமார் ஜோடி, வீல் சேர் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் ஸ்வாதி, அடில் முகமது ஜோடி பைனலுக்கு முன்னேறின.
இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி பிரவின், 4-6 என சைப்ரசின் கிறிஸ்டோஸ் மிசோசிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர்கள் யுகல் கார்க், பவன் குமார் மோதினர். இதில் யுகல் 6-2 என வென்று வெண்கலம் வசப்படுத்தினார்.
