ADDED : அக் 25, 2025 11:01 PM

ராஞ்சி: தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் 'சீனியர்' தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது.15 ஆண்டுக்குப் பின், நான்காவது சீசன் இன்று, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடக்கிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு என 6 நாடுகளின் சார்பில் 206 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்தியாவின் மானவ், 13.78 வினாடியில் வந்து தங்கம் வென்றார். மற்றொரு வீரர் கிரிஷிக் (14.01) வெண்கலம் கைப்பற்றினார். இலங்கையின் ரணதுங்கே (13.90) வெள்ளி கைப்பற்றினார்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் நந்தினி (13.56), மவுமிதா (13.81) முதல் இரு இடம் பெற, தங்கம், வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றனர்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் (3 நிமிடம், 54.58 வினாடி) தங்கம் வென்றார். சுனில் தவாருக்கு (3:55.83) வெண்கலம் கிடைத்தது. இலங்கையின் ருசிருவுக்கு (3:55.12) வெள்ளி கிடைத்தது. பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சனா சிங் (4:25.36), தங்கம், காஜல் (4:26.21) வெண்கலம் வசப்படுத்தினர்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் நீரு பதக் (53.15), ஒலிம்பா (54.13) முதல் இரு இடம் பெற்றனர். ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் முகமது (46.56) வெள்ளி வென்றார்.
இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியா 10 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

