ADDED : ஆக 13, 2026 10:15 PM

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், பிரிட்டன் வீரர் மாத்யூ ஹட்சன்-ஸ்மித், பந்தய துாரத்தை 44.17 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ஜேசன் ஜோசப் (13.10 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி என, 6 பதக்கம் கைப்பற்றி பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.
பைனலில் ஸ்வியாடெக்
டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான 'நேஷனல் பாங்க்' ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-3, 1-6, 6-3 என வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். இதில் ரிபாகினா 5-7, 6-2, 6-2 என வென்றார்.
பி.எஸ்.ஜி., அணி கலக்கல்
சால்ஸ்பர்க்: ஆஸ்திரியாவில், ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து 51வது சீசனுக்கான பைனல் நடந்தது. இதில் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் 'நடப்பு சாம்பியன்'களான முறையே பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,), இங்கிலாந்தின் ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி., அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
களமிறங்கிய மெஸ்ஸி
மயாமி: அமெரிக்காவின் மயாமியில் நடந்த லீக்ஸ் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் இன்டர் மயாமி (அமெரிக்கா), லியோன் (மெக்சிகோ) அணிகள் மோதின. இதில் இன்டர் மயாமி அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தனது தந்தையின் மறைவுக்கு பின், மீண்டும் போட்டிக்கு திரும்பிய அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி, 2வது பாதியில் களமிறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று மெஸ்ஸியை வரவேற்றனர்.
எக்ஸ்டிராஸ்
* அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில், 'சின்க்யுபீல்டு' கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா (கறுப்பு), ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (வெள்ளை) மோதினர். இதில், 51வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். மூன்று சுற்றுகளின் முடிவில் தலா 1.5 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரக்ஞானந்தா.
* கொல்கட்டாவில் நடக்கும் சேலஞ்சர் ஸ்குவாஷ் அரையிறுதியில், இந்திய வீராங்கனை தான்வி கண்ணா 1-3 (11-6, 2-11, 7-11, 7-11) என, எகிப்தின் சோஹைலா ஹசெம்மிடம் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சூரஜ் குமார் சந்த் 0-3 (8-11, 2-11, 7-11) என எகிப்தின் முகமது கோஹரிடம் வீழ்ந்தார்.
* ராஞ்சியில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்தியது. ஜாம்ஷெட்பூர் சார்பில் லாம்சங்ஜுவாலா 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
