/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சீனியர் தடகளம்: இந்தியா முதலிடம்
/
சீனியர் தடகளம்: இந்தியா முதலிடம்
ADDED : அக் 26, 2025 11:15 PM

ராஞ்சி: தேசிய சீனியர் தடகளத்தில் 20 தங்கம் உட்பட 58 பதக்கம் கைப்பற்றிய இந்தியா முதலிடம் பிடித்தது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 4வது சீசன் நடந்தது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு என 6 நாடுகளின் சார்பில் 206 பேர் பங்கேற்றனர்.
பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் அமன்தீப் கவுர், இலக்கை 2 நிமிடம், 04.66 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சங்கீர்த்தனா (2 நிமிடம், 07.09 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் ருச்சித் மோரி (50.10 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் கர்ணா பேக் (51.06) வெண்கலம் வென்றார்.
பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் ரவீனா (34 நிமிடம், 45.47 வினாடி) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் அபிஷேக் (30 நிமிடம், 29.46 வினாடி), பிரின்ஸ் குமார் (31 நிமிடம், 17.37 வினாடி) முறையே தங்கம், வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் அசத்திய இந்தியாவின் சந்தீப் சிங் (21.23 வினாடி), பிரதிக் (21.44) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் சாக் ஷி (23.91 வினாடி), நீரு (24.06) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
இம்முறை 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என, 58 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றது. கடைசியாக 2008 ல் கொச்சியில் நடந்த தொடரில் இந்தியாவுக்கு 57 பதக்கம் (24 தங்கம், 19 வெள்ளி, 14 வெண்கலம்) கிடைத்திருந்தது.

