/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஷவாயு தாக்கி ஆவடி மாநகராட்சி பணியாளர் பலி
/
விஷவாயு தாக்கி ஆவடி மாநகராட்சி பணியாளர் பலி
ADDED : ஆக 12, 2024 04:25 AM

ஆவடி : ஆவடி மாநகராட்சியில் ஜெ.பி.எஸ்டேட் பகுதியில் 'ஜெட் ராடிங்' இயந்திரம் வாயிலாக பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணி, கடந்த இரு நாட்களாக நடந்து வந்தது.
இந்த பணியில், ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று பகல் 12:00 மணி அளவில், ஆவடி, அருந்ததிபுரத்தைச் சேர்ந்த கோபிநாத், 25, என்பவர், 'ஜெட் ராடிங்' இயந்திரத்தை இறக்கி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விஷவாயு தாக்கி, கோபிநாத் பாதாள சாக்கடையில் மயங்கி விழுந்துள்ளார். சக ஊழியர் அவரை மீட்க முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை.
விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்களில், இளவரசன் என்பவர் பாதுகாப்பு உடை அணிந்து, 20 அடி ஆழ பாதாள சாக்கடைக்குள் இறங்கி கோபிநாத்தை மீட்டார். உடனடியாக, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதிக்கையில் இறந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார், ஒப்பந்த நிறுவன மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் ஆவடி, ஜெ.பி.எஸ்டேட்டைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த கோபிநாத்துக்கு, மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.