/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்
/
கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா துவக்கம்
ADDED : மார் 03, 2025 11:32 PM

திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
செங்கை மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடைவீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை 4:30 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில் உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களின் கந்தா, சரவணா, அரோகரா கோஷத்துடன் அதிகாலை 5:30 மணிக்கு உற்சவ கொடி ஏற்றப்பட்டது.
பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல்அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் செய்திருந்தனர்.
l திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா பந்தக்கால் நடப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில்.
நான்கு வேதங்களே மலைக்குன்றுகளாக வீற்று, குன்றின் உச்சியில், வேதகிரீஸ்வரர் சுயம்பு மலைகொழுந்தாக வீற்று, கோவில் கொண்டுள்ளார்.
அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், அருகில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றுள்ளார்.
கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்விழா, மே மாதம் முதல் வாரம் நடக்கவுள்ளது.
இதை முன்னிட்டு, கோவிலில் நேற்று காலை, வேதமந்திரங்கள் முழங்கி வழிபட்டு, பந்தக்கால் நடப்பட்டது.
செயல் அலுவலர் புவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.