/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தவறான தகவல் அளிப்பு ஓராண்டுக்கு பின் மனுதாரருக்கு இழப்பீடு
/
தவறான தகவல் அளிப்பு ஓராண்டுக்கு பின் மனுதாரருக்கு இழப்பீடு
தவறான தகவல் அளிப்பு ஓராண்டுக்கு பின் மனுதாரருக்கு இழப்பீடு
தவறான தகவல் அளிப்பு ஓராண்டுக்கு பின் மனுதாரருக்கு இழப்பீடு
ADDED : மே 23, 2024 12:41 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுகுன்றத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து தவறான தகவல் அளித்த பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவருக்கு சொந்தமான நிலத்தை அளவிடக்கோரி, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், கடந்த 2011ம், 2019ம், 2020ம் ஆண்டுகளில், கட்டணம் செலுத்தினார். நில அளவைத் துறையினர், நிலத்தை அளவிடாமல் தாமதப்படுத்தி, அலைக் கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் நிலத்திற்கு கிழக்கில், புல எண் 3/2ஏ2 என, உட்பிரிவு வகைப்படுத்தி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை சார்ந்த ஆவணங்கள் அளிக்கவும் கேட்டு, தாலுகா அலுவலக பொது தகவல் அலுவலரிடம், 2019 மே 22ம் தேதி விண்ணப்பித்தார். அலுவலர் அளித்த பதில், மனுதாரருக்கு திருப்தியளிக்கவில்லை.
இதையடுத்து, தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம், அதே ஆண்டு ஜூலை 17ம் தேதி, முதலாவதாக மேல்முறையீடு செய்தார்.
அவர் கோரிய தகவல்களை அளிக்காத நிலையில், தகவல்கள் அளிக்க உத்தரவிடக்கோரி, அதே ஆண்டு ஆக., 14ம் தேதி, இரண்டாம் மேல்முறையீடாக, மாநில தகவல் ஆணையத்தில் மனு அளித்தார்.
அவர் கோரிய தகவல்களை அளிக்குமாறு, 2020 அக்., 1ம் தேதி ஆணையம் உத்தரவிட்டும், தகவல்கள் அளிக்கப்படவில்லை.
ஆணைய உத்தரவை நிறைவேற்றாதது குறித்து, அதே ஆண்டு அக்., 21ம் தேதி, மீண்டும் மனு அளித்தார். அதன் விசாரணையில், ஆணைய உத்தரவை பொருட்படுத்தாமல், சரியான தகவல்கள் அளிக்காததை ஆணையம் உணர்ந்தது.
தவறான தகவல் அளித்த பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதிக்குமாறு, மனுதாரர் வலியுறுத்தினார். இதையடுத்து, அவர் கோரிய தகவல்களை அளித்து, இழப்பீடாக 5,000 ரூபாய் வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூன் 21ல், ஆணையம் உத்தரவிட்டது.
ஓராண்டு கடந்த நிலையில், நேற்று முன்தினம், அபராத தொகைக்கான வரைவோலை பெற்றதாக, சரவணன் தெரிவித்தார்.
இவர் கோரிய தகவல்களை அளிக்காத திருக்கழுக்குன்றம் சார் - பதிவாளர் நிர்வாகம், 15,000 ரூபாய் இழப்பீடு அளிக்கவும், தகவல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

