/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொலை மிரட்டல் விடுத்த பஞ்., தலைவி கணவர் கைது
/
கொலை மிரட்டல் விடுத்த பஞ்., தலைவி கணவர் கைது
ADDED : ஆக 25, 2024 11:37 PM

சென்னை: செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் ஊராட்சி, மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன்; அ.தி.மு.க., நிர்வாகியான இவர், பாடியநல்லுார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
கடந்தாண்டு ஆக., 17ம் தேதி, அருகில் உள்ள மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகள் முத்து சரவணன், ஞாயிறு சதீஷ் ஆகியோர், தனிப்படை போலீசாரால், கடந்த அக்டோபர் மாதம் 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர்.
பார்த்திபன் நினைவு நாளான, கடந்த 18ம் தேதி, பார்த்திபனின் அண்ணன் நடராஜன், 53, என்பவர், தன் 'பேஸ்புக்' பக்கத்தில், கொலை மிரட்டல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'என் தம்பியின் கொலைக்கு காரணமாக இருந்த உச்சக்கட்ட துரோகி வீட்டில், இதே போன்ற காரியம் ஓராண்டிற்குள் நடக்கும். துரோகிக்கு 'கவுன்ட் டவுன்' ஆரம்பமாகிவிட்டது' என, பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரித்த செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, பாடியநல்லுாரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நடராஜனை கைது செய்தனர்.
இவர், பாடியநல்லுார் ஊராட்சி மன்ற தலைவி ஜெயலட்சுமியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

