/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையம் வேடந்தாங்கலில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் வேடந்தாங்கலில் திறப்பு
ADDED : செப் 13, 2024 11:53 PM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில் சொர்ணவாரி நெல் சாகுபடியில், 12,703 ஹெக்டேர் பரப்பளவில், நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம் வட்டாரத்தில் அச்சிறுபாக்கம், ராமாபுரம், செம்பூண்டி, செண்டிவாக்கம், கிணார், பூதுார், படாளம், எல்.என்.புரம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000த்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்யப்பட்டது.
தற்போது, சில தினங்களாக, நெல் அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, தேவைக்கேற்ற இடங்களில் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், வேடந்தாங்கல் ஊராட்சி பகுதியில், பதிவு செய்த 29 விவசாயிகளிடமிருந்து, சன்ன ரகம் 40 கிலோ எடை கொண்ட 2,576 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இன்னும், 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், திருக்கழுக்குன்றம் தாலுகாவில், ஆயப்பாக்கம், நல்லாத்துார், நெரும்பூர், விட்டிலாபுரம், பெரிய காட்டுப்பாக்கம், நத்தம்கரியச்சேரி, பெரியகாட்டுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.