/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கலில் டெலஸ்கோப் பழுது சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
வேடந்தாங்கலில் டெலஸ்கோப் பழுது சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
வேடந்தாங்கலில் டெலஸ்கோப் பழுது சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
வேடந்தாங்கலில் டெலஸ்கோப் பழுது சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : மார் 02, 2025 11:22 PM

மதுராந்தகம்,வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை, சுற்றுலாப் பயணியர் கண்டு ரசிக்க, 'டெலஸ்கோப்' அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மதுராந்தகம் அருகே உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேடந்தாங்கல் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.
தற்போது, 12 அடிக்கு ஏரியில் தண்ணீர் உள்ளது.
இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
இதில் நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, கரண்டி வாயன், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் உள்ளன. 30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
ஏப்ரல், மே மாதங்களில் இந்த பறவைகள், தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தற்போது, சுற்றுலாப் பயணியர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கல்விச் சுற்றுலா வருகின்றனர்.
பறவைகளை அருகில் காணும் வகையில், சரணாலயத்தில் உள்ள பறவைகள் கண்காணிப்பு கோபுரத்தில், கடந்த ஆண்டு 'டெலஸ்கோப்' அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது பழுது காரணமாக, இந்த ஆண்டு துவக்கம் முதல், தற்போது வரை டெலஸ்கோப் அமைக்கப்படாமல், வெறிச்சோடி உள்ளது.
அதனால், பறவைகள் சரணாலயத்திற்கு அருகே கடைகளில் விற்பனை செய்யப்படும் டெலஸ்கோப்பை, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி, சுற்றுலா பயணியர் வாங்கி பயன் படுத்துகின்றனர்.
இதனால், சுற்றுலா பயணியருக்கு கூடுதல் தொகை செலவாகிறது.
இதை தவிர்க்கும் வகையில், சரணாலயத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில், டெலஸ்கோப் அமைக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.