/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் கவரிங் நகையை அடகு வைத்த இருவர் கைது
/
செய்யூரில் கவரிங் நகையை அடகு வைத்த இருவர் கைது
ADDED : ஆக 05, 2024 09:30 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த சால்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் கனகசபை, 64. செய்யூர் பஜார் பகுதியில் அடகு கடை வைத்துள்ளார். அங்கு, கடந்த 2ம் தேதி, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காமாட்சி, 70, என்பவர், 10 கிராம் எடை கொண்ட கவரிங் நகையை அடகு வைத்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன், இதே போன்ற நகை அடகு வைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த கனகசபை, வழக்கமாக நகையை உரசி பார்ப்பதை விட கூடுதலாக உரசி பார்த்த போது, முலாம் பூசப்பட்ட கவரிங் நகை என தெரியவந்தது.
பின், இரண்டு தினங்களுக்கு முன் அடகு வைக்கப்பட்ட நகையை ஆய்வு செய்தபோது, அதுவும் கவரிங் நகை என தெரியவந்தது.
இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்திற்கு கனகசபை தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் காமாட்சியை கைது செய்து விசாரணை செய்தனர்.
அதில், சேலம் மாவட்டம், குகை கிராமத்தை சேர்ந்த இந்திரா, 39, என்பவருடன் இணைந்து, இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார்.
பின், தனிப்படை அமைத்து, சேலத்திற்கு சென்ற செய்யூர் போலீசார், நேற்று முன்தினம் இந்திராவை கைது செய்து, அவரிடம் இருந்த 10,000 ரூபாய் பணம் மற்றும் ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.
பின், இருவரையும் நேற்று செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.