/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல ஆண்டுகளுக்கு பின் 30 கி.மீ., சாலை பணிக்கு...ரூ.15 கோடி ஒதுக்கீடு!: வனத்துறை அனுமதியால் கிராமவாசிகள் மகிழ்ச்சி
/
பல ஆண்டுகளுக்கு பின் 30 கி.மீ., சாலை பணிக்கு...ரூ.15 கோடி ஒதுக்கீடு!: வனத்துறை அனுமதியால் கிராமவாசிகள் மகிழ்ச்சி
பல ஆண்டுகளுக்கு பின் 30 கி.மீ., சாலை பணிக்கு...ரூ.15 கோடி ஒதுக்கீடு!: வனத்துறை அனுமதியால் கிராமவாசிகள் மகிழ்ச்சி
பல ஆண்டுகளுக்கு பின் 30 கி.மீ., சாலை பணிக்கு...ரூ.15 கோடி ஒதுக்கீடு!: வனத்துறை அனுமதியால் கிராமவாசிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 15, 2024 02:31 AM

செங்கல்பட்டு:ஆறு ஊராட்சி ஒன்றியங்களில், 30 கி.மீ., சாலையில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு, 15.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின், மடையத்துார் கிராம சாலைக்கு வனத்துறை அனுமதி அளித்து, சாலை அமைக்கம் பணி நடப்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால், வெளியிடங்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மடையத்துார் கிராம சாலை வனத்துறை வழியாக செல்வதால், பராமரிக்க முடியாமல் சாலை சீரழிந்து போக்குவரத்து லாயக்கற்ற சாலையாக மாறியதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என, முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். அதன்பின், சாலைகள் சீரமைக்க தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.
தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 2022- - 23ம் ஆண்டில், எட்டு ஒன்றியங்களில், பிரதான ஒன்றிய சாலைகள் மற்றும் இதர ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்துதல், பலப்படுத்துதல், பராமரிப்பு பணிகளை மேற்கோள்ள, 60.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். அதன்பின், 96.89 கி.மீ., சாலைகள் சீரமைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 2024- - 25ம் ஆண்டிற்கு, 15.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இத்திட்டத்தில், ஆறு ஊராட்சி ஒன்றியங்களில், 30.44 கி.மீ., சாலைகள் சீரமைக்க, நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தவிட்டார். அதன்பின், சாலை மற்றும் பாலப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை துவக்கியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களில், சாலை பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், மழைக்காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.