/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 09, 2024 09:48 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சுதந்திர தின விழா உரையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்தகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என தெரிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர், வரும் 20ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்தமாக இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.
சொந்த இடமாக இருந்தால், சொத்துவரி ரசீது அல்லது குடிநீர் வரி ரசீது, மின் இணைப்பு ரசீதும், வாடகை இடமாக இருந்தால், அதன் உரிமையாளரிடம் ஒப்பந்த பத்திரம் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியமாக, 3 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
டாப் செட்கோ, தாட்கோ, டாம்கோ பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து, முதல் தவணை மானிய தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும்.
மேலும், மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன பெட்டி, 'ஏசி' மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் அமைத்தபின், இறுதிகட்ட மானியம் 1.50 லட்சம் ரூபாய்க்கு மருந்துகள் வழங்கப்படும் என, செங்கல்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.