/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட வன அலுவலகம் ஏப்., 1ல்...துவக்கம்!:விவசாயிகள், பல்வேறு துறையினர் நிம்மதி
/
செங்கை மாவட்ட வன அலுவலகம் ஏப்., 1ல்...துவக்கம்!:விவசாயிகள், பல்வேறு துறையினர் நிம்மதி
செங்கை மாவட்ட வன அலுவலகம் ஏப்., 1ல்...துவக்கம்!:விவசாயிகள், பல்வேறு துறையினர் நிம்மதி
செங்கை மாவட்ட வன அலுவலகம் ஏப்., 1ல்...துவக்கம்!:விவசாயிகள், பல்வேறு துறையினர் நிம்மதி
ADDED : பிப் 14, 2025 10:51 PM
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் அமைக்க, அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த அலுவலகம் செங்கல்பட்டில், வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலக எல்லைக்கு உட்பட்டு காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரக கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு வனக்கோட்டத்தில், 17,059 ஹக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகளும், காஞ்சிபுரம் வனக்கோட்டத்தில், 3,384 ஹக்டேர் பரப்பளவில் காப்புக்காடுகளும் அமைந்துள்ளன.
இந்த காப்புக்காடுகளில் மான், மயில், முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் மற்றும் காப்புக்காடுகளை பாதுகாக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நெல் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தினால், அதற்கு இழப்பீடு தொகை பெறலாம். மேலும், வனப்பகுதியை ஒட்டி 500 மீட்டர் தொலைவுக்கு வீட்டு மனை பிரிவு, தொழிற்சாலைகள் ஆரம்பிக்க, வனத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் வனப்பகுதி வழியாக, தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள் செல்கின்றன.
இச்சாலைகளை சீரமைக்க, புதிதாக அமைக்க அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு உள்ளாட்சி துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிரமப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, கடந்த 2019ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் துவக்கப்பட்டது. அப்போது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் பிரிக்கப்பட்டு தனியாக இயங்கின.
ஆனால், வனத்துறை மட்டும் பிரிக்கப்படாமல் இருந்தது.
இதனால், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்தால், இழப்பீடு கோரி மனு அளிக்க விவசாயிகள், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
இதனால், விவசாயிகளுக்கு கால விரயம், பொருள் விரயம் ஏற்பட்டது. அதன் பின், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தை பிரித்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்தைப் பிரித்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் அமைக்க, கடந்த ஜன., 27ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவில், காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலக எல்லைக்குள் ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய சரகங்களுடன், புதிதாக குன்றத்துார் வனச்சரகம் இணைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலக எல்லைக்குள் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய சரகங்கள் உள்ளன. இதில், வண்டலுார், செய்யூர் வனச்சரகங்கள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம், வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, செங்கல்பட்டில் செயல்படும் என, வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலகத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில், மாவட்ட வன அலுவலகம், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனால் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு அலைச்சல் குறையும்.
- ரவி மீனா,
மாவட்ட வன அலுவலர்,
காஞ்சிபுரம்.