/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 24, 2025 03:09 AM

செய்யூர்: கடப்பாக்கத்தில் உள்ள மீன் அங்காடி கட்டடத்தை சீரமைத்து, செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக, மீன் சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு கடப்பாக்கம்குப்பம், ஆலம்பரைக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு போன்றவை நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கப்பிவாக்கம், விளம்பூர், வேம்பனுார் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், குறைந்த விலைக்கு இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
பேரூராட்சி சார்பாக 10 ஆண்டுகளுக்கு முன் மீன் அங்காடி கட்டடம் கட்டித்தரப்பட்டு, வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் வியாபாரிகள் மீன் அங்காடி கட்டடத்தை பயன்படுத்தாமல், சாலை ஓரத்தில் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனால், மீன் அங்காடி கட்டடம் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது.
சாலை ஓரத்தில் மீன் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடப்பதால், மீன் வாங்க வருவோர் தங்களது வாகனங்களை, சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள், ஆலம்பரைக்கோட்டைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர்.
மேலும், வார விடுமுறை நாட்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, மீன் அங்காடி கட்டடத்தை சீரமைத்து, 'டெண்டர்' விட்டு கடைகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

