பக்தர்களை கடித்த குரங்கு: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
பக்தர்களை கடித்த குரங்கு: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
UPDATED : ஆக 08, 2026 04:53 PM
ADDED : ஆக 08, 2026 03:32 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10 பேரை குரங்கு கடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து நந்திவரம் செல்லும் வழித்தடத்தில், பழமையான புதுப்பாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வந்து அம்மனை தரிசித்தனர். அப்போது, கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, நான்கு குழந்தைகள் உட்பட 10 பேரை கடித்துள்ளது. பின் அங்கிருந்தோர் காயமடைந்தவர்களை அருகில் உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக, தனியார் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் கடந்த இரு மாதங்களுக்கு முன் இக்கோவிலில் பக்தர்களை கடித்த குரங்கை வனத்துறையினர் மீட்டனர். குரங்குகளின் அட்டகாசத்தால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைகின்றனர். எனவே, வனத்துறையினர் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
