/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடமேல்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
/
வடமேல்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
வடமேல்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
வடமேல்பாக்கம் சாலை படுமோசம் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 21, 2025 02:09 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அருகில் சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலை, 1.200 கி.மீ., துாரம் உடையது. இச்சாலையை சட்டமங்கலம், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையின் ஒரு பகுதி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம் நாட்டரம்பட்டு ஊராட்சியிலும் உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அப்பகுதிமக்கள் சென்று வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு முதல்வரின் கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 66.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது.
இந்த சாலையில், 100 மீ., துாரத்திற்கு இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், சாலை அமைக்க வனத்துறை அனுமதியளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால், சேதமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.
மேலும், அவசர காலங்களில் பயணம் செய்வது சவாலாக உள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.