/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கம்ப்யூட்டர் கடையில் புகுந்த உடும்பு மீட்பு
/
கம்ப்யூட்டர் கடையில் புகுந்த உடும்பு மீட்பு
ADDED : செப் 24, 2024 04:37 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் பாபு, 45, என்பவர் கம்ப்யூட்டர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை 10:00 மணிக்கு கடையை திறந்து வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார். நேற்று மதியம் 12:15 மணியளவில் பல்லியை போன்று உருவம் கொண்ட பெரிய உயிரினம் ஒன்று கடைக்குள் புகுந்து அங்கும், இங்குமாக வேகமாக ஓடியது.
இதையடுத்து, பாபு அதை விரட்ட முயன்றார். அது, கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் அடுக்கி வைத்திருந்த பெட்டிகளின் இடையில் சென்று பதுங்கி கொண்டது.
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் பார்த்தபோது, பதுங்கி இருந்தது உடும்பு என தெரிய வந்தது. பின், பிரத்யேக உபகரணம் வாயிலாக, 1.5 அடி நீளமுள்ள உடும்பை பிடித்து, பாலாற்றங்கரை ஒட்டியுள்ள புதர்மண்டிய பகுதிக்குள் விட்டனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், கம்ப்யூட்டர் உதிரிபாகம் விற்பனையகத்தில் உடும்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

