/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு 'காப்பு'
/
மேல்மருவத்துாரில் பைக் திருடிய நபருக்கு 'காப்பு'
ADDED : அக் 13, 2025 12:56 AM

மேல்மருவத்துார்:சூணாம்பேடு அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 37. இவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை செல்வதற்காக, அவருக்குச் சொந்தமான 'ஸ்பிளெண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை, மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
பின், மீண்டும் நேற்று அதிகாலை வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், வாகனத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் அகிலி கூட்ரோடு பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரியலுார் மாவட்டம், மேலுார் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், 47, என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், காணாமல் போன ராஜேந்திரனின் இருசக்கர வாகனம் என தெரிந்தது.
இதையடுத்து, வாகனத்தை திருடிய பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.