/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழக்கரணைக்கு சிற்றுந்து இயக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
கீழக்கரணைக்கு சிற்றுந்து இயக்க பகுதிவாசிகள் கோரிக்கை
கீழக்கரணைக்கு சிற்றுந்து இயக்க பகுதிவாசிகள் கோரிக்கை
கீழக்கரணைக்கு சிற்றுந்து இயக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : மார் 28, 2025 08:43 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் கீழக்கரணை பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்துடன், மறைமலைநகர் சிப்காட் பகுதியை ஒட்டி, தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
இப்பகுதிவாசிகள் மருத்துவம், கல்வி, வங்கி சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு மறைமலைநகர், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் 3 கி.மீ., துாரம் நடந்து சென்று, ஜி.எஸ்.டி., சாலைக்கு சென்று பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது.
எனவே, இந்த பகுதியில் சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் தாம்பரம் -- கீழக்கரணை தடத்தில் இயக்கப்பட்டு வந்த ஒரே மாநகர பேருந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
அதன் பின் போக்குவரத்து சேவை இல்லாமல், வேலைக்குச் சென்று வருவோர் நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை தொடர்கிறது.
வேலை முடிந்து இரவில் வருவோர், அச்சத்துடன் வரும் சூழல் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தடங்களில் சிற்றுந்துகள் இயக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த தடத்திலும் சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.