/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
/
கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
ADDED : மார் 31, 2025 02:01 AM
திருப்போரூர்:ஒரகடம் ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி கோவிலில், ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய ஒரகடம் கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகோபில மடத்தைச் சார்ந்த புராதன கோவிலான, ஸ்ரீகோதண்டராமர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் திருவிழாவாக, பங்குனி மாத ஸ்ரீராமநவமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கோவிலைச் சேர்ந்த உபயதாரர் வாயிலாக, நேற்று முன்தினம் இரவு, முதல் நாள் விழா நடந்தது.
கோவில் பட்டாச்சாரியார் குழுவினரால், திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை 7:00 மணியளவில், கருட வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி, கருட சேவையாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து மாடவீதி தெருக்களில் உள்ளவர்கள் வீட்டின் முன் நின்று, பெருமாளுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பிரதான விழாவாக வரும் 6ம் தேதி ஸ்ரீராமநவமியன்று சிறப்பு லட்சார்ச்சனையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.