/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு அச்சத்தில் திருமுக்கூடல் மக்கள்
/
கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு அச்சத்தில் திருமுக்கூடல் மக்கள்
கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு அச்சத்தில் திருமுக்கூடல் மக்கள்
கனரக வாகனங்களால் விபத்து அதிகரிப்பு அச்சத்தில் திருமுக்கூடல் மக்கள்
ADDED : அக் 16, 2025 01:30 AM

திருமுக்கூடல்: திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களால் அடிக்கடி ஏற்படும் விபத்து கிராம மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேரி, பினாயூர், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்குகின்றன.
கல் குவாரி மற்றும் கிரஷர்களுக்கு சென்று வரும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் பழவேரி, அருங்குன்றம், மதுார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக இரவு, பகலாக இயங்குகின்றன.
இதனால், அக்கிராம சாலைகள் வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் வாயிலாக சென்று வரும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினசரி அவதிக்குள்ளாகின்றனர்.
அதிக பாரம் ஏற்றியும், அதிவேகமாகவும், தார்ப்பாய் போர்த்தாமலும் இயங்கும் கனரக வாகனங்களால் மற்ற வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தினமும் மரண பயத்தோடு பயணிக்கும் நிலை உள்ளதாக புலம்புகின்றனர்.
அதிலும், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மீது வாகனங்கள் இயக்குவது கடும் சவாலாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறியதாவது,
கனரக வாகனங்களால் மதுார், அருங்குன்றம், பட்டா, பழவேரி உள்ளிட்ட கிராம சாலைகள் தொடர்ந்து சேதமாகி வருகின்றன. ஐந்து ஆண்டுகளில் இப்பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து கை, கால்களை இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் தடம் எண்டி: 81., என்ற படூர் வரை இயங்கும் அரசு பேருந்து மீது, லாரி மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் தடம் எண்:55 என்கிற நெய்யாடுவாக்கம் செல்லும் அரசு பேருந்து மீது, லாரி மோதி, 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
எனவே, திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் விதிமீறல் கனரக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை. இப்பகுதிகளில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு கட்டாய தடை விதிக்க வேண்டும்.
திருமுக்கூடல் பாலாற்று பாலம் மீது லோடு வாகனங்களை அனுமதிக்காமல் அருகில் உள்ள பாலாற்று தரைப்பாலம் மீது அந்த வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
திருமுக்கூடல் பாலாற்று பாலம் மீது பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க ஏற்கனவே தடை அறிவிப்பு உள்ளது. வீதிமீறல் வாகனங்கள் குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தணிக்கை செய்து வாகனங்கள் பறிமுதல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
எனினும், இவ்வாறான நடவடிக்கைகள் கடுமையாக்க காவல்துறையிடம் அறிவுறுத்தப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.