/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
யுனெஸ்கோ குழுவினர் மாமல்லை வருகை?
/
யுனெஸ்கோ குழுவினர் மாமல்லை வருகை?
ADDED : செப் 22, 2024 08:12 PM
மாமல்லபுரம்:யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியில், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவுச்சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. சிற்ப பகுதிகளை சூழ்ந்து, கடைகள், கட்டடங்கள் என, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
இங்கு, வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, கடந்த 18ம் தேதி முதல் அரசுத் துறையினர் அகற்றிவரும் நிலையில், நாளை மறுநாள் வரை தொடர்ந்து அகற்றப்படுகிறது.
கடந்த 1984ல், இங்குள்ள கடற்கரை கோவிலை, சர்வதேச பாரம்பரிய சின்னமாக முதலில் அங்கீகரித்த யுனெஸ்கோ அமைப்பு, அங்கீகார பகுதியின் பாதுகாப்பு, பராமரிப்புச் சூழல் எவ்வாறு உள்ளது என்பதைய அறிய, மாமல்லபுரத்தில் பார்வையிட உள்ளதாகவும், அதற்காகவே ஆக்கிரமிப்புகள் அவசரமாக அகற்றப்படுவதாகவும், இப்பகுதியினர் பரபரப்பாக பேசுகின்றனர்.
இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில், தொல்லியல் துறையின்கீழ் உள்ள பாரம்பரிய நினைவுச்சின்ன கோட்டை வளாகத்தை மேம்படுத்தி, யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச அங்கீகாரம் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ குழுவினர், வரும் 27ம் தேதி, அங்கு பார்வையிட உள்ளனர். மாமல்லபுரத்தில் பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுவது தவறான தகவல் தான். இங்கு அவர்கள் வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.