/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கிற்கு விமோசனம்...எப்போது?:15 நாளுக்கு ஒருமுறையே வெளியேற்றுவதால் அவதி
/
ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கிற்கு விமோசனம்...எப்போது?:15 நாளுக்கு ஒருமுறையே வெளியேற்றுவதால் அவதி
ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கிற்கு விமோசனம்...எப்போது?:15 நாளுக்கு ஒருமுறையே வெளியேற்றுவதால் அவதி
ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கிற்கு விமோசனம்...எப்போது?:15 நாளுக்கு ஒருமுறையே வெளியேற்றுவதால் அவதி
ADDED : ஏப் 02, 2025 10:01 PM

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம் கிடங்கில் தேக்கி வைக்கப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால், பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதற்கு விடியல் உண்டாக்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், 692.92 ஹெக்டேர் பரப்புள்ள ஊரப்பாக்கத்தில், பேரூராட்சி மக்கள் தொகைக்கு இணையாக மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள, 15 வார்டுகளில், 11,126 வீடுகள் உள்ளதாக, கடந்த 2024ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கையும் சேர்த்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
சுகாதாரம், சாலை, வடிகால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளில், ஊரப்பாக்கம் ஊராட்சி மிகவும் பின்தங்கி உள்ளது.
இங்கு, 15 வார்டுகளுக்கும் சேர்த்து, 18 துாய்மைப் பணியாளர்களே உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாள் கூலியாக, 325 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
துாய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தும், குறைந்த ஊதியம் என்பதால், இந்த பணிக்கு எவரும் வரவில்லை.
ஊரப்பாக்கம் ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு, 30 டன் குப்பை சேர்கிறது. போதிய பணியாளர்கள் இல்லாததால், தெருக்களில் தேங்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், வாரம் ஒரு முறை மட்டுமே சேகரிக்கப்பட்டு, காரணை புதுச்சேரி சாலையில் உள்ள ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கில் தேக்கி வைக்கப்படுகிறது. இங்கிருந்து, 10 லாரிகளில், தலா 10 முறை என, மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பை அப்புறப்படுத்தப்பட்டு, ஆப்பூர் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், ஊரப்பாக்கம் கிடங்கில் பல வாரங்களாக, பல்லாயிரம் 'டன்' எடையில் தேக்கி வைக்கப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுவதால், காரணை புதுச்சேரி சாலையில் செல்வோர், மூக்கை பொத்தியபடி செல்கின்றனர்.
தவிர, மழை பெய்யும் போது குப்பை மேடு நனைந்து, அதிலிருந்து அழுகல் நாற்றத்துடன் சிவப்பு நிறத்தில் வெளியேறும் நீர், அதிக துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடி, அவ்வழியாகச் செல்வோருக்கு குமட்டல், ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதனால், இந்த குப்பைக் கிடங்கை அகற்றி விமோசனம் கிடைக்க வழி செய்ய வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊரப்பாக்கம் ஊராட்சியின் 12 மற்றும் 13வது வார்டுகளுக்கு இடையே, 3 ஏக்கர் பரப்பில், அரசுக்குச் சொந்தமான, 'பழத்தோட்டம்' என்ற காலி இடம் இருந்தது.
அதில் 2 ஏக்கர் இடம், 20 ஆண்டுகளுக்கு முன், அரசியல் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின், அதிகாரிகள் துணையோடு, பட்டாவும் வழங்கப்பட்டது.
எஞ்சியுள்ள 100 சென்ட் இடம் மட்டும், குப்பை கொட்டும் இடமாக மாறியது.
தற்போது, தெருக்கள்தோறும் குப்பை சேகரிக்க 10 சிறிய குப்பை சேகரிப்பு வண்டிகள், 3 சிறிய டிராக்டர்கள், 6 பெரிய டிராக்டர்கள் உள்ளன.
இந்த வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பை, காரணை புதுச்சேரி சாலையில் உள்ள ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கில் தேக்கி வைக்கப்படும்.
இங்கிருந்து, 10 லாரிகளில், தலா 10 முறை என, மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பை அப்புறப்படுத்தப்பட்டு, ஆப்பூர் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஊராட்சி கருவூலத்தில் நிதி இல்லாத போது, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே, இந்த கிடங்கிலிருந்து குப்பை அப்புறப்படுத்தப்படுகிறது.
இதனால், குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் குடும்பத்தினர், பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர். ஊராட்சி முழுதும் கொசுத்தொல்லை அதிகரித்து, ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கும், இந்த குப்பைக் கிடங்கே காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊரப்பாக்கம் குப்பைக் கிடங்கில் தேக்கி வைக்கப்படும் குப்பையை அப்புறப்படுத்தி, ஆப்பூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்ல, ஒரு லாரிக்கு வாடகை 7,500 ரூபாய். டாரஸ் வாகனத்திற்கு வாடகை 10,500 ரூபாய். தவிர, லாரியில் குப்பையை ஏற்ற உதவும்,'பொக்லைன்' வாகனத்திற்கு வாடகை 8,000 ரூபாய்.
இதற்காக, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவாகிறது. எனவே, கிடங்கில் தேக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த, ஒரு பொக்லைன் மற்றும் ஒரு லாரி தேவை. இதை வாங்கித் தரும்படி, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கேட்டால், நிதி இல்லை என்கின்றனர்.
இதுவரை வாடகையாக செலுத்திய பணத்தில், இரண்டு லாரிகளை சொந்தமாக வாங்கியிருக்கலாம். ஆனால், இதுவரை வாடகைக்கு தான் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
லாரி வாடகையில் அதிகாரிகள் சிலருக்கு தனிப்பட்ட 'லாபம்' இருப்பதால், சொந்தமாக வாங்க விருப்பவில்லை.
வார்டு கவுன்சிலர்கள்,
ஊரப்பாக்கம்.