/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவமழைக்கு 1,217 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு நிவாரண தொகை விரைந்து வழங்க வலியுறுத்தல்
/
பருவமழைக்கு 1,217 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு நிவாரண தொகை விரைந்து வழங்க வலியுறுத்தல்
பருவமழைக்கு 1,217 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு நிவாரண தொகை விரைந்து வழங்க வலியுறுத்தல்
பருவமழைக்கு 1,217 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு நிவாரண தொகை விரைந்து வழங்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 10, 2025 02:19 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு கலெக்டர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயம் மேற்கோள்ளப்படுகிறது. மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இப்பகுதியில், சம்பா பருவம், நவரை பருவங்களில், 10,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழை பெய்ததில், ஐந்து வட்டாரங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்ட விவரங்கள் கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதில், 1,217.5 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக, வேளாண்மைத் துறையினர் தெரிவித்தனர்.
அதன் பின், விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க, கலெக்டர் அருண்ராஜ் பரிந்துரையின்படி, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, அரசுக்கு கடந்த ஜன., 30ம் தேதி கருத்துரு அனுப்பி வைத்தார்.
பருவ மழைக்காலங்களில் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிக்கப்பட்டால், ஒரு ஏக்கருக்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்குகின்றனர்.
அந்த வகையில், மாவட்டத்தில், 1,217.5 ஏக்கருக்கு, 20 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

