/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் தேங்கி நாறும் செங்கை பஸ் நிலையம்...படுமோசம்!:சில்மிஷ ஆசாமிகளால் பெண்கள் தினமும் தவிப்பு
/
கழிவுநீர் தேங்கி நாறும் செங்கை பஸ் நிலையம்...படுமோசம்!:சில்மிஷ ஆசாமிகளால் பெண்கள் தினமும் தவிப்பு
கழிவுநீர் தேங்கி நாறும் செங்கை பஸ் நிலையம்...படுமோசம்!:சில்மிஷ ஆசாமிகளால் பெண்கள் தினமும் தவிப்பு
கழிவுநீர் தேங்கி நாறும் செங்கை பஸ் நிலையம்...படுமோசம்!:சில்மிஷ ஆசாமிகளால் பெண்கள் தினமும் தவிப்பு
ADDED : பிப் 16, 2025 03:04 AM

செங்கல்பட்டு:கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், அடிப்படை வசதியின்றி படுமோசமான நிலையில் உள்ளது. பெண்கள் மற்றும் பள்ளி மாணவியரை சீண்டும் போதை நபர்களையும் போலீசார் கண்டுகொள்ளாததால், பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில், செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் எனும், புதிய பேருந்து நிலையம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இங்கிருந்து காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர், வந்தவாசி, திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலையத்திற்குள் தினமும், 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால், இங்கு பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணியருக்கு, அமர இருக்கை வசதி இல்லை.
இதனால் கர்ப்பிணியர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில், தனியார் அமைப்பு வாயிலாக, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வசதி ஏற்படுத்தப்பட்டது.
துவக்கத்தில் முறையாக செயல்பட்ட நிலையில், தற்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீரின்றி பயணியர் தவித்து வருகின்றனர்.
அதிக விலைக்கு, கடைகளில் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.
மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கால்வாய்கள் உடைந்து துார்ந்து உள்ளதால், கழிவுநீர் வெளியேறி பாய்கிறது.
இதனால், பேருந்து வளாகமே கொசுக்களின் புகலிடமாக மாறி உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் மாடுகளும் அவ்வப்போது திரிவதால், அங்கே மாட்டுச்சாணமும் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.
செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல, தினமும் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பள்ளி முடிந்து மாலை நேரங்களில் சொந்த ஊருக்குச் செல்ல, பேருந்துக்காக காத்திருக்கின்றனர். அப்போது, பேருந்து இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள், மாணவியருக்கு, அங்கு திரியும் போதை ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், மாலை 5:00 மணிக்கு மேல் மாணவியர், பெண்கள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கவே அச்சப்படுகின்றனர்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் சிலர், இங்கு வந்து இளம்பெண்களை கிண்டல் செய்து வருவதும் தொடர்கிறது.
பேருந்து நிலைய பகுதியிலும், பேருந்து நுழைவாயில் பகுதியிலும், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் ஏற்படும் நெரிசல் தீர்ந்தபாடில்லை. நிலையத்திற்குள் வரும் பேருந்துகளுக்கு வழிவிடாமல், ஆட்டோக்காரர்கள் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சிலர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல், வசதியான இடங்களில் நிறுத்துகின்றனர். இதனாலும் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், போக்குவரத்து மாற்றம் பெயரில் அனைத்து வாகனங்களும் பேருந்து நிலையத்திற்குள் வந்து வெளியேறுவதால், எப்போதும் நெரிசல் உள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்யவும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக, பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பெண்கள் மற்றும் முதியவர்களிடம் நகை பறிப்பு, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ளவர்கள், கழிவுநீரை வளாகத்திலேயே வெளியேற்றுவதால், துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும் மெத்தனமாக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அதற்குள் பேருந்து நிலையத்தை முறையாக சீரமைக்க வேண்டும்.
மேலும், குற்ற சம்பவங்களைத் தவிர்க்க, காலை மற்றும் மாலை நேரங்களில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.