/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பீக் ஹவர்'சில் லாரிக்கு தடை உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
/
'பீக் ஹவர்'சில் லாரிக்கு தடை உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
'பீக் ஹவர்'சில் லாரிக்கு தடை உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
'பீக் ஹவர்'சில் லாரிக்கு தடை உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
ADDED : ஆக 29, 2024 12:30 AM
செம்மஞ்சேரி, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, ஓ.எம்.ஆர்., -- இ.சி.ஆர்., கேளம்பாக்கம் - வண்டலுார் பிரதான சாலை, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலைகளில், போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
நெரிசல், விபத்துகளை தடுக்க, கொரோனா தொற்று பரவல் காலகட்டத்திற்கு முன், காலை, மாலை பீக் - ஹவர்ஸ் வேளைகளில், இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்வதால், பீக் - ஹவர்ஸ் நேரத்தில் நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளன.
இதனால், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க, லாரி உரிமையாளர்களுடன் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
இதில், குடிநீர் மற்றும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இதில், 'காலை 7:00 மணி முதல் 10:00 வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, பிரதான சாலைகளில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லக்கூடாது' என, போலீசார் தெரிவித்தனர். இதற்கு, குடிநீர் லாரி உரிமையாளர்கள் சம்மதித்தனர்.
கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், 'இரவு நேரத்தில் வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீரை லாரியில் எடுக்க முடியாததால், பகல் நேரத்தில் எடுக்கிறோம். இதில், நேரம் குறைப்பு சாத்தியமில்லை.
முழு நேரமும் கழிவுநீர் கொண்டு செல்ல அனுமதி தர வேண்டும்' என்றனர்.இதை, 'போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அனுமதி நேரம் குறித்து தெரிவிக்கப்படும்' என, போலீசார் பதில் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து, கேளம்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், வண்டலுார் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.