/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்யூரில் பெண் ஆர்.ஐ.,க்கு மிரட்டல் எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
செய்யூரில் பெண் ஆர்.ஐ.,க்கு மிரட்டல் எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யூரில் பெண் ஆர்.ஐ.,க்கு மிரட்டல் எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யூரில் பெண் ஆர்.ஐ.,க்கு மிரட்டல் எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 12:22 AM

செய்யூர்,
செய்யூர் வட்ட வருவாய்த்துறை சார்பாக, ஜமாபந்தி முகாம் கடந்த 16ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடந்தது. மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமை வகித்தார்.
செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாமூர், சூணாம்பேடு, கடப்பாக்கம், கயப்பாக்கம், கொடூர், லத்துார், செய்யூர் ஆகிய, ஏழு குறுவட்டங்களுக்கும், தனித்தனியே முகாம் நடந்தது.
புதிய வீட்டுமனை பட்டா கோருதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல், நிலம் அளவீடு செய்தல், புதிதாக முதியோர் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தல், விடுபட்ட முதியோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தல், வாரிசு சான்றிதழ், உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பித்தல் என, பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று முன்தினம், தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழை, பயனாளிகளுக்கு செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு வழங்கினார்.
விழாவில், செய்யூர் அடுத்த இரண்யசித்தி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்பவர், 'நான் வாரிசு சான்றிதழ் வேண்டி அளித்த மனு ஏன் நிராகரிக்கப்பட்டது?' என, எம்.எல்.ஏ., பாபுவிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அங்கிருந்த செய்யூர் வருவாய் ஆய்வாளர் கல்பனா, 'முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும், இறந்த நபரின் முதல் மனைவி சென்னையில் வசிப்பதால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும், தெரிவித்தார்.
அப்போது, உடனே வாரிசு சான்றிதழ் வழங்கக் கூறி, வருவாய் ஆய்வாளரிடம் எம்.எல்.ஏ., பாபு வலியுறுத்தியுள்ளார். அதற்கு வருவாய் ஆய்வாளர் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, 'எம்.எல்.ஏ., சொல்கிறேன், அவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குங்கள்' என, மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
பின், வருவாய்த்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
அப்போது, அரசு அதிகாரிகளின் முன், பெண் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி, தரக்குறைவாக பேசிய செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபுவை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் வருவாய் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., பாபு உடனே வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும், இல்லையெனில், அடுத்த வாரம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

