/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடுகள் தோறும் குப்பை தேங்குவதால் அதிருப்தி
/
வீடுகள் தோறும் குப்பை தேங்குவதால் அதிருப்தி
ADDED : மே 07, 2024 12:29 AM
செம்பாக்கம் தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் வார்டுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டிலும், இப்பணியை மேற்கொள்ள, ஆறு வாகனங்கள், 30 துாய்மை பணியாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு வார்டில் கூட பணியாளர்கள் எண்ணிக்கை முழுதாக இருப்பதில்லை.
தினசரி, 2, 3 பேர் மட்டுமே வருகின்றனர். அதேபோல், வாகனங்களும் குறைவாகவே வருகின்றன. இதனால், அனைத்து வீடுகளிலும் குப்பை சேகரிக்காமல் ஆங்காங்கே தேங்கி கிடப்பதாக, புகார் எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மூன்றவாது மண்டலத்தில், ஒவ்வொரு மண்டலத்திலும் குப்பை சேகரிக்கும் பணி சுணக்கமாக நடந்து வருகிறது. வீடுகளில் நாள் கணக்கில் குப்பை தேங்கி, சுகாகார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களிடம் கேட்டால், 11 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அதற்கு அதிகாரிகள் கமிஷன் கேட்கின்றனர். அதனால், பணி செய்ய முடியவில்லை என்கின்றனர்.
அதேபோல், மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள் 17 பேர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். மற்றொரு புறம், தினக்கூலி ஊழியர்கள் 10 பேர், அலுவலகத்தில் டீ, காபி வாங்கி கொடுக்கும் பணி செய்து வருகின்றனர்.
நகராட்சியாக இருந்த போது, முறையாக குப்பை எடுக்கப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை
செம்பாக்கத்தில் முறையாகவே குடியிருப்பு கணக்கு எடுக்கப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு, எடை கணக்கின் அடிப்படையிலேயே பணம் வழங்கப்படுகிறது. ஆனால், அந்நிறுவனம் முறையாக குப்பை எடுப்பதில்லை. தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. முறையாக பணி செய்யவில்லை எனில், அந்நிறுவனத்தின் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அருளானந்தம், நகர் நல அலுவலர், மாநகராட்சி