வழிகாட்டி/ ‘யூசர் நேம் – பாஸ்வேர்டை பகிர வேண்டாம்’
வழிகாட்டி/ ‘யூசர் நேம் – பாஸ்வேர்டை பகிர வேண்டாம்’
ADDED : ஜூலை 11, 2026 09:14 PM
‘‘இன்ஜினியரிங்கில் சேர காத்திருக்கும் மாணவர்கள், தங்களின், ‘யூசர் நேம் – பாஸ்வேர்டை’ யாரிடமும் பகிரக்கூடாது,’’ என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு செயலர் பருஷோத்தமன் பேசினார்.
அவர் பேசியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான அனைத்து தகவல்களும், தமிழக தொழில்கல்வி இயக்ககத்தின் சார்பில், ‘https://www.tneaonline.org/’ என்ற இணையதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் உள்ள கல்லுாரிகள்தான், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை பதிவுகளை பெற்றவை. அவற்றின் கடந்தகால செயல்பாடுகளும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அதை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்துகொள்வது நல்லது.
மேலும், இன்ஜினியரிங் சேர்க்கைக்கு, வெளிப்படையாக உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், இரண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு நேரில் சென்று, அனைத்து தகவல்களையும் அறிவதோடு, அங்குள்ளவர்களின் உதவியுடன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேகமாக பயனர் அடையாள எண் மற்றும் அவரவர் உருவாக்கும் ரகசிய குறியீடுகள் இருக்கும். அதாவது, ‘யூசர் ஐ.டி., – பாஸ்வேர்ட்’ ஆகியவற்றை மாணவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
எந்த மொபைல் எண்ணை வழங்குகிறோமோ அதற்கு ஒ.டி.பி., எனும் ஒருமுறை குறியீடு அனுப்பபப்படும். அதனால், அதை எப்போதும் அணுகும் முறையில் வைத்திருக்க வேண்டும். யாரிடமும், யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பகிர வேண்டாம்.
சிறப்பு கவுன்சிலிங், நாளையும், நாளை மறுநாளும் தொடங்க உள்ளது. அதில், மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம். அடுத்து, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான கவுன்சிலிங்கிற்கு, 13, 14ம் தேதிகளிலும், பொது மாணவர்களுக்கான கவுன்சிலிங், 15,16,17,18, ஆகிய நான்கு நாட்கள் நடக்கும். தொடர்ந்து, ஜூலை, 20ம் தேதி பொது கவுன்சிலிங் தொடங்கும்.
மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் கல்லுாரிகளின் குறியீட்டு எண்ணை மறக்க கூடாது. ஒருவர் எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அதன்பின், மூன்றுநாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள், எத்தனை கல்லுாரிகளின் பெயர்களையும் நீக்கலாம். அதைத்தொடர்ந்து, சேர்க்கை, கட்டணம் உள்ளிட்ட நடைமுறைகளை, ஒதுக்கப்பட்ட நாட்களில் முடித்துவிடுவது நல்லது.
இவ்வாறு, அவர் பேசினார்.
**
