ADDED : ஜூலை 11, 2026 09:14 PM
* ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குநர் நாகராஜன் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களும், தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.
உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது, இந்தியாவின் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட தென்மாநில நகரங்களில், தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன.
அந்த வகையில், தகவல் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல்ஸ், பசுமை சக்தி, வேளாண் தொழில்நுட்பம், பயோமெடிக்கல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மருந்து மற்றும் சுகாதாரம், செமிகண்டக்டர் உள்ளிட்ட துறை நிறுவனங்களில், சென்னையிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக எலக்ட்ரானிக் சிப் தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு புதிய துறைகளுக்கான வாய்ப்புகள் இந்தியாவில் வர உள்ளன.
அதேபோல், அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடுக்கு தனி வரவேற்பு உள்ளது.
அதனால், மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்கும் நான்காண்டு காலத்தில், புதிய தொழில்நுட்பங்களை அறியும் வேட்கையோடு, தேடுதலில் ஈடுபட வேண்டும்.
ரோபோட்டிக், ஆட்டோமேஷன், உள்ளிட்ட ஒருங்கிணைந்த படிப்புகளை, ஆண்டுக்கு இரண்டு என, ஆறு இணை படிப்புகளை முடிக்க வேண்டும்.
படிக்கும் காலத்திலேயே இன்டெர்ஷிப் வாய்ப்புகள், சர்வதேச கருத்தரங்குகள், ஹேக்கத்தான் உள்ளிட்ட வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தங்களின் தொழில்நுட்பம் சார்ந்த புரிதலை மேம்படுத்தும் வகையில், வல்லுநர்களுடன், ‘லிங்க்டு இன், கிட்ஹப்’ உள்ளிட்டவற்றில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
படிப்பை முடித்ததும், இந்திய நிறுவனங்களுக்குள் வேலைவாய்ப்பை பெறும் திறமையுடன் இருப்பதைவிட, சர்வதேச நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையுடனும், குழுவிற்கு தலைமை தாங்குவது உள்ளிட்ட பண்புகளுடனும் வெளிவர வேண்டும். வேலை கிடைத்தபிறகும், புதிய தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
