/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் அழுத்தம் பிரச்னை வரதராஜபுரத்தில் தீர்வு
/
மின் அழுத்தம் பிரச்னை வரதராஜபுரத்தில் தீர்வு
ADDED : மே 17, 2024 12:11 AM
பூந்தமல்லி,நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வரதராஜபுரம் ஊராட்சியில் மின் அழுத்தம் பிரச்னையை, மின்வாரிய அதிகாரிகள் சரி செய்தனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில், வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, காமராஜர் தெரு, ராஜிவ்காந்தி தெரு, ஸ்டாலின் தெரு, மேட்டு தெரு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகியவற்றில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில், இங்கு கடந்த 15 நாட்களாக, மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டது.
குறைந்த மின் அழுத்தம், அதிக மின் அழுத்தம் என மாறி மாறி வருவதால், வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகின. இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த 13ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, பூந்தமல்லி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், நேற்று முன்தினம் வரதராஜபுரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின், அதே பகுதியில், மின் அழுத்தம் பிரச்னை இல்லாத டிரான்ஸ்பார்மர் மூலம், புதிய மின்கம்பம் நட்டு, புதிய மின் இணைப்பு கொடுத்து, குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை சரி செய்தனர்.

