/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெற்குன்றம் கோவிலில் திருக்கல்யாணம் தக்கார், அறக்கட்டளைக்கு உத்தரவு
/
நெற்குன்றம் கோவிலில் திருக்கல்யாணம் தக்கார், அறக்கட்டளைக்கு உத்தரவு
நெற்குன்றம் கோவிலில் திருக்கல்யாணம் தக்கார், அறக்கட்டளைக்கு உத்தரவு
நெற்குன்றம் கோவிலில் திருக்கல்யாணம் தக்கார், அறக்கட்டளைக்கு உத்தரவு
ADDED : மே 02, 2024 12:37 AM
சென்னை, சென்னையைச் சேர்ந்த 'ஹிந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை' நிறுவனரான லிங்கேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கோவில்களில், எங்கள் அறக்கட்டளை சார்பில் 'மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்' உள்ளிட்ட மத நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
சென்னை, நெற்குன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருவல்லீஸ்வரர் கோவிலில், மீனாட்சி - சுந்தரேஸ்வர் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவது என, கடந்த பிப்ரவரியில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கு அனுமதி கோரி, கோவில் பரம்பரை அறங்காவலரை அணுகினோம். அவரும் உடனடியாக அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, வரும் 5ம் தேதி திருக்கல்யாண உற்சவத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. கோயம்பேடு குற்றாலிங்கேஸ்வரர் - வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இருந்து, மங்கள வாத்தியங்களுடன் சீர்வரிசையுடன் ஊர்வலமாக, திருவல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டோம்.
ஊர்வலம் துவங்குவதற்கு முன், குற்றாலிங்கேஸ்வரர் கோவிலில் சடங்குகளை மேற்கொள்ள, நிர்வாக அதிகாரியிடம் அனுமதி கோரப்பட்டது.
தற்போது, திருவல்லீஸ்வரர் கோவில் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. பரம்பரை அறங்காவலர்கள் தொடர்ந்திருந்த வழக்கை, பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், திருவல்லீஸ்வரர் கோவில் தக்காராக, குற்றாலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவரிடம், திருக்கல்யாண ஏற்பாடுகள் குறித்து தெரிவித்த போது, எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே, நெற்குன்றம் திருவல்லீஸ்வரர் கோவிலில், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்துவதில், எந்த விதத்திலும் குறுக்கிட, நிர்வாக அதிகாரிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி பவானி சுப்பராயன் பிறப்பித்த
உத்தரவு:
திருக்கல்யாண நிகழ்ச்சியை, மனுதாரர் அறக்கட்டளை நடத்தலாம். நிகழ்ச்சி நிரல் முழுதையும், சடங்குகளை மேற்கொள்பவர்கள் யார் என்ற விபரங்களையும், தக்காரிடம் வழங்க வேண்டும். அட்டவணைப்படி, தக்கார் நடவடிக்கை எடுக்கலாம். நிகழ்ச்சி நடைமுறையை அவர் மேற்பார்வையிட வேண்டும்.
திருக்கல்யாணம் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த, தக்காருக்கு அறக்கட்டளையினர் உதவ வேண்டும். கடவுளை தவிர வேறு யாருக்கும், முதல் மரியாதை அளிக்கக் கூடாது. திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்ததும், மேற்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும், மனுதாரர் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை.
வரும் 6ம் தேதி நடக்க உள்ள தீர்த்தவாரி நிகழ்ச்சியை, தக்கார் மேற்கொள்வார். பக்தர்களாக, மனுதாரர் அறக்கட்டளையும் பங்கேற்கலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

