ADDED : செப் 15, 2025 01:00 AM
காசிமேடு; காசிமேடில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தண்டையார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 49; சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு, வலது கன்னத்தில் கட்டி இருந்ததால், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மனைவி மல்லிகாவுடன் சிகிச்சை பெற சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அது புற்றுநோய் கட்டி என தெரிவித்துள்ளனர்.
இன்று அவருக்கு, கீமோதெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். தகவலறிந்து மன விரக்தியடைந்த பாலாஜி, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த ராயபுரம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் தினேஷ் குமார், கடலில் குதித்து பாலாஜியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். காசிமேடு துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.