/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவாபுரிக்கு முருக பக்தர்கள் வந்த மினி பஸ் ஆவடியில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இளம்பெண் பலி; 18 பெண்கள் உட்பட 22 பேர் காயம்
/
சிறுவாபுரிக்கு முருக பக்தர்கள் வந்த மினி பஸ் ஆவடியில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இளம்பெண் பலி; 18 பெண்கள் உட்பட 22 பேர் காயம்
சிறுவாபுரிக்கு முருக பக்தர்கள் வந்த மினி பஸ் ஆவடியில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இளம்பெண் பலி; 18 பெண்கள் உட்பட 22 பேர் காயம்
சிறுவாபுரிக்கு முருக பக்தர்கள் வந்த மினி பஸ் ஆவடியில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இளம்பெண் பலி; 18 பெண்கள் உட்பட 22 பேர் காயம்
ADDED : பிப் 25, 2026 06:29 AM

சென்னை: விழுப்புரத்தில் இருந்து சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்த மினி பேருந்து, ஆவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்; 22 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சிறுவாபுரி முருகன் மலை கோவிலுக்கு, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் 'ஸ்வராஜ் மஸ்தா' மினி பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை புதுச்சேரியைச் சேர்ந்த மோகன், 36, என்பவர் ஓட்டினார்; அவர் உட்பட 23 பேர் பயணித்தனர்.
அதிகாலை 6:00 மணியளவில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், ஆவடி அடுத்த வெள்ளானுார், அந்தோணியார் நகரில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர வடிகால்வாய் தடுப்புச் சுவரில் மோதி, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், முன் இருக்கை யில் அமர்ந்திருந்த புதுச்சேரி, சூர மங்கலத்தைச் சேர்ந்த ரிவேகா, 20, அவரது 2 வயது மகன், முன்பக்க கண்ணாடியை உடைத்து துாக்கி வீசப்பட்டனர்.
வடிகால்வாய் தண்ணீரில் விழுந்த சிறுவன், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். பலத்த காயமடைந்த ரிவேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவ்வழியாக அரசு பேருந்து மற்றும் வாகனங்களில் சென்றோர், உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மினி பேருந்தில் சிக்கியிருந்த 18 பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ரிவேகாவின் மகன் உட்பட இரண்டு சிறுவர்கள் என, 22 பேரையும் மீட்டனர்.
அவர்களுக்கு ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆவடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ரிவேகாவின் உடலை கைப் பற்றி, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், பள்ளத்தில் விழுந்த மினி பேருந்தை 'கிரேன்' வாயிலாக மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் துாக்க கலக்கத்தால் விபத்து நடந்தது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

