தொடரும் மின் வெட்டால் ஆத்திரம்: வாரிய அலுவலகம் இரவில் முற்றுகை
தொடரும் மின் வெட்டால் ஆத்திரம்: வாரிய அலுவலகம் இரவில் முற்றுகை
UPDATED : செப் 17, 2026 03:33 PM
ADDED : செப் 17, 2026 03:01 PM

ஆவடி: ஸ்ரீபெரும்புதுார் துணை மின் நிலையத்தில் இருந்து திருவேற்காடிற்கு வரும் 230 கி.வா., திறன் உடைய மின் பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறால், ஆவடி, அயப்பாக்கம், பூந்தமல்லி பகுதிகளில், ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அதனால் பகுதிமக்கள், துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆவடி, திருவேற்காடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, கோவர்தனகிரி, காமராஜர் நகர், திருவேற்காடு, அயப்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, மின்வெட்டு ஏற்பட்டது.
அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால், ஆத்திரமடைந்த ஆவடி பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள துணை மின் வாரியத்தை, நள்ளிரவில் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆவடி போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், முற்றுகையாளர்களிடம் சமாதானம் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் துணை மின் நிலையத்தில் இருந்து திருவேற்காடிற்கு வரும் 230 கி.வா., திறன் உடைய மின் பாதையில் ஏற்பட்ட கோளாறால், மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின், கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இரவு 11:30 மணிக்கு மின் விநியோகம் சீரானதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
மின் வெட்டால் ஆவடி, திருவேற்காடு, அயப்பாக்கம், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 50,000க்கும் மேற்பட்ட பகுதிமக்கள் அவதியடைந்தனர்.
மின் வெட்டு பிரச்னைக்காக, இந்த துணை மின் நிலையத்தில் பகுதிமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது, இது நான்காவது முறை.
