/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய வானிலை ஆய்வு மைய 150ம் ஆண்டு விழா கோலாகலம்
/
இந்திய வானிலை ஆய்வு மைய 150ம் ஆண்டு விழா கோலாகலம்
ADDED : ஜன 09, 2025 02:44 AM

கொளத்துார்:இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ம் ஆண்டு விழா, கொளத்துாரில் உள்ள 'எவர்வின்' பள்ளி வளாகத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை வானிலை மையமும் 'எவர்வின்' பள்ளி குழுமமும் இணைந்து நடத்திய இந்த விழாவில், 150ம் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், 'ஐ.எம்.டி., - 150' வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். மேலும், 'இந்திய வானிலை ஆய்வுத்துறையின் 150 காலப்பயணம்' என்ற தலைப்பிலான பிரத்யேக கண்காட்சி, முக ஓவியம், விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
விழாவில், சென்னை வானிலை மையத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன், எவர்வின் பள்ளி குழும மூத்த தலைவர் புருஷோத்தம்மன், சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் வானிலை மைய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சென்னை வானிலை மையத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் பேசியதாவது:
கடந்த 1875ல் வானிலை ஆய்வு மையம் துவக்கப்பட்டது. செயற்கைக்கோள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளால், இன்று அபரிமித வளர்ச்சியை கண்டுள்ளது.
இன்னும் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை. வரும் 11 மற்றும் 13ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. அதேவேளையில், பகலில் ஆவியாதல் அதிகமாக இருப்பதால், பகலில் வெயில் தாக்கமும், இரவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
வெப்ப மாறுபாடு காரணமாக, ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் உறைப்பனியை காண்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

