/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தில் குளறுபடி மாநில அரசே காரணம் என்கிறது ஆணையம்
/
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தில் குளறுபடி மாநில அரசே காரணம் என்கிறது ஆணையம்
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தில் குளறுபடி மாநில அரசே காரணம் என்கிறது ஆணையம்
ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்தில் குளறுபடி மாநில அரசே காரணம் என்கிறது ஆணையம்
ADDED : நவ 20, 2025 03:19 AM

கூடுவாஞ்சேரி: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையை, எட்டு வழியாக விரிவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு, 270 கோடி ரூபாய் அளித்தும், அரைகுறையாகவே பணிகள் நடந்துள்ளன.
விபத்துகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், 'இதற்கு நாங்கள் பொறுப்பல்ல; மாநில அரசுதான் பதில் சொல்ல வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான, 39 கி.மீ., நீளமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், எட்டு வழி சாலையாக மாற்றும் பணிகள் 2018ல் துவங்கின. இந்த பணிகள், 2023 வரை நடந்தன.
பணிகள் முடிந்ததாக கூறப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் அணுகு சாலைகள் அமைக்கப்படவில்லை. தவிர, மழைநீர் கால்வாய் பணிகள் துவக்கப்படவில்லை. அணுகுசாலை இல்லாததால், எதிரெதிர் திசையில் வாகனங்கள் பயணித்து, விபத்துகள் நடக்கின்றன. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மகேந்திரா சிட்டி முதல் மெல்ரோசாபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கும், தைலாபுரம் முதல் அய்யஞ்சேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. பல இடங்களில் அணுகு சாலை முழுமை அடையாததால், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை, சாலையோர கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, தங்களுக்கான, 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி விட்டனர்.
தவிர, சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, விடுபட்டுள்ள இடங்களில், அணுகுசாலை பணிகளை விரைந்து முடித்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 39 கி.மீ., துாரம் உள்ள ஜி.எஸ்.டி., சாலை, 2000ம் ஆண்டு வரை, இரு வழிப்பாதையாக இருந்தது. நான்கு வழி சாலையாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு, 2002 மே மாதம் பணிகள் துவக்கப்பட்டன; 2004 அக்டோபரில் பணிகள் முடிந்தன.
தொடர்ந்து போக்குவரத்து அதிகரித்ததால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையை அணுகு சாலை, மழைநீர் வடிகால் வசதியுடன், எட்டு வழி சாலையாக தரம் உயர்த்த, 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அப்போது, 'இந்த பணியை நாங்களே செய்கிறோம்' என, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, எங்களிடம் கோரிக்கை வைத்தது.
முதற்கட்டமாக, 2018ல், இரும்புலியூர் முதல் வண்டலுார் வரையிலான, 2.3 கி.மீ., துாரமுள்ள சாலையை, எட்டு வழி சாலையாக மாற்ற, தமிழக நெடுஞ்சாலைத்துறையிடம், 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டது
2019ல், வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான 5.3 கி.மீ., துார சாலையை, எட்டு வழி சாலையாக மாற்ற, 42.28 கோடி ரூபாய் வழங்கப் பட்டது
கூடுவாஞ்சேரி முதல் மகேந்திரா சிட்டி வரையிலான, 13.3 கி.மீ., துாரமுள்ள சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற, 2021ல், 209 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதன்படி மொத்தம், 270 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பல இடங்களில், அணுகு சாலை அமைக்கப்படவில்லை; மழைநீர் வடிகால் பணிகள் துவக்கப்படவில்லை எனவும், சாலை விரிவாக்கத்தின்போது, அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலை துறையினர்தான் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

