/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரந்துார் ஏர்போர்ட் நிலத்திற்கான இழப்பீடு...ஏக்கருக்கு ரூ.2.57 கோடி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
/
பரந்துார் ஏர்போர்ட் நிலத்திற்கான இழப்பீடு...ஏக்கருக்கு ரூ.2.57 கோடி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
பரந்துார் ஏர்போர்ட் நிலத்திற்கான இழப்பீடு...ஏக்கருக்கு ரூ.2.57 கோடி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
பரந்துார் ஏர்போர்ட் நிலத்திற்கான இழப்பீடு...ஏக்கருக்கு ரூ.2.57 கோடி: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
ADDED : ஜூன் 30, 2025 03:09 AM

சென்னை:பரந்துார் புதிய விமான நிலையம் அமைய கையகப்படுத்தப்படும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை, ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல், 2.57 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்து, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கும் வகையில், இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
டில்லி, தெலுங்கானா ைஹதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை விமான நிலையம் அளவில் சிறியது. இருப்பினும், விமான நிலையத்தை ஆண்டுக்கு, 2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரிவாக்கம் செய்ய தேவையான இட வசதி இல்லை.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை, பொது- தனியார் கூட்டு முயற்சியில், 29,150 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
விமான நிலைய திட்டத்திற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றிய, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவை. அதில், 3,331 ஏக்கர் தனியார் வசம் உள்ள பட்டா நிலம்; மீதம் அரசுக்கு சொந்தமானவை.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதல் என, இரு அனுமதிகளும் மத்திய அரசிடம் இருந்து கிடைத்துவிட்டன. தற்போது விமான நிலையம் அமைக்க கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரும் பணிகள் நடக்கின்றன.
இத்திட்டத்தை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுத்துகிறது.
3,331 ஏக்கர்
பரந்துார் விமான நிலையத்திற்காக, 3,331 ஏக்கர் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இதற்கு சில கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். போராட்டம், 1,000 நாட்களையும் கடந்தது. அரசு பல கட்ட பேச்சு நடத்தி தீர்வு கண்டது.
இந்நிலையில், கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், இழப்பீட்டு தொகையை ஐந்து மடங்கு உயர்த்தி, அரசு நிர்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இழப்பீட்டு தொகை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பராமரிப்பு மண்டலம்
இந்நிலையில், பரந்துார் விமான நிலைய திட்டத்தில், விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பது போன்ற பணிகளை, விமான துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வசதியாக, பராமரிப்பு, பழுதுபார்ப்பு, செயல்பாட்டு மண்டலம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில் புதிதாக விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதால், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் விமான நிலையத்தில், விமானங்களை பழுதுபார்க்கும், பராமரிக்கும் எம்.ஆர்.ஓ., மண்டலம் உள்ளது.
இதேபோல், பரந்துார் விமான நிலைய திட்டத்திலும் எம்.ஆர்.ஓ., மண்டலம் அமைக்கப்படும். இது, 1,000 ஏக்கர் வரை உடையது. முதல் கட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு, 500 கோடி ரூபாய் செலவிடப்படும்.
இதன் வாயிலாக, விமானங்களில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்யும் வசதி, பராமரிக்கும் வசதி உள்ளிட்டவை, விமான சேவை நிறுவனங்களுக்கு பரந்துாரிலேயே கிடைக்கும்.
இந்த துறையில் தொழில் துவங்க தமிழகம் வருமாறு, பிரான்ஸ் நாட்டில் எம்.ஆர்.ஓ., துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை, கடந்த வாரத்தில் தமிழக குழு சந்தித்து அழைப்பு விடுத்துள்ளது.
இதன் வாயிலாக பரந்துார் விமான நிலையம், விமான துறைக்கான ஒட்டுமொத்த சேவையையும் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.