ADDED : ஜூலை 25, 2026 02:50 AM
நீதிமன்றத்தில் ரவுடி சரண்
குன்றத்துார்: குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ, 34, மீது, கொலை உள்ளிட்ட 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, குன்றத்துார் அருகே பழந்தண்டலம் ஊராட்சி தலைவர் தியாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஏற்கனவே நான்கு பேர், இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேத்யூ, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். பின், சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ.10 லட்சம் போதை பொருள் சிக்கியது
சென்னை: கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது நபர், அம்மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதை பொருள் கடத்தி வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை பிடித்த என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான போலீசார், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத் ஆம் பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரையும் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற பெண்கள் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவொற்றியூர் சந்திரா, 63, வியாசர்பாடி பார்வதி, 26, ஆகியோரை கைது செய்த, எம்.கே.பி., நகர் போலீசார், 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஒடிஷாவில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அரும்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற விக்னேஷ், 30, அஜித், 30, பாண்டியன், 42; தலைமை செயலக குடியிருப்பின் குன்னுார் சாலையில் கஞ்சா விற்ற ஷயின்ஷா ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
- துணிக்கடையில் பெண்ணிடம் பணம் திருட்டு
குரோம்பேட்டை: பெருங்குடியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டனி ராஜி, 41. நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு பொருட்களை வாங்க சென்றார்.
முதல் மாடியில் புடவை பார்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பெண்கள், ஜேம்ஸ் ஆண்டனி ராஜி தாயின் கவனத்தை திசை திருப்பி, அவர் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை திருடிச் சென்றனர். குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மொபைல் போன் திருடிய சிறுவன் கைது
ராயபுரம்: ராயபுரம், பி.வி., கோவில் தெருவில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜிப்சேக், 27, உட்பட 10க்கும் மேற்பட்டோர், பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி இரவு ராஜிப்சேக் உட்பட ஐந்து பேரின் மொபைல் போன்கள் திருடுபோனது. இது குறித்து விசாரித்த ராயபுரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட, 17 வயது சிறுவனை கைது செய்து, இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்; மூன்று பேரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் அத்துமீறியவர் பிடிபட்டார்
துரைப்பாக்கம்: அடையாறு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 33 வயது பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரிடம், பெருங்குடியைச் சேர்ந்த அல்தாப் ஹுசைன், 52, என்பவர், நட்பு ரீதியாக பழகினார்.
கடந்த 23ம் தேதி அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே நுழைந்த அல்தாப் ஹுசைன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கூச்சலிடவே, அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்படி, துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து, அல்தாப் ஹுசைனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
