ADDED : ஜூலை 13, 2026 02:20 AM
கூரியரில் போதை மாத்திரைகள் சிக்கின
தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில், தனியார் கூரியர் நிலையத்திற்கு, சந்தேகிக்கும் வகையில் தனியார் மருத்துவமனை பெயரில் நேற்று முன்தினம் பார்சல் வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் போலீசார், கூரியர் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதை வாங்க வந்த, குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீஸ்ரீ, 28, என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர். அந்த பார்சலை சோதனை செய்தபோது, 1,100 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அவற்றை போதைக்காக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லீஸ்ரீயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இறந்தவர் அடையாளம் தெரிந்தது
புழல்: ரெட்டேரியில் மூழ்கி இறந்த ஒருவரின் உடலை, நேற்று முன்தினம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர். புழல் போலீசார், இறந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 45, என்பது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இவர், மது போதையில் கால் இடறி ஏரியில் விழுந்திருக்கலாம் என, போலீசார் சந்தேக்கின்றனர்.
அடுத்தடுத்து மொபைல்போன், பைக் திருட்டு
அம்பத்துார்: அம்பத்துார் - செங்குன்றம் சாலை, புதுார் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் ஒரு ஸ்கூட்டரில் இருந்து மொபைல் போன் திருடுபோனது. அம்பத்துார், கள்ளிக்குப்பம் அணுகு சாலை அருகே இருந்து, நேற்று அதிகாலை ஒரு பைக் திருடுபோனது. இந்த இரு திருட்டு குறித்து புகார் அளிக்கப்படவில்லை.
போதை பொருளுடன் அசாம் வாலிபர் கைது
கிண்டி: கிண்டி, ஈக்காட்டுதாங்கலில் பைக்கில் வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஜிப் உசைன், 26, என்பவரை, ரோந்து பணியில் இருந்த கிண்டி போலீசார், நேற்று முன்தினம் பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் 13 கிராம் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். கிண்டி பகுதியில், ஆட்டோவில் குட்கா கடத்தியது மற்றும் 'கூல் லிப்' எனும் போதை பொருள் விற்றது தொடர்பாக, முகமது ஆசிக், 37, ரகுமான், 46, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 144 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
12 சவரன் நகையை திருப்பி தராதவர் கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பிரபாவதி, 43. இவர், தனக்கு பழக்கமான அண்ணா நகரைச் சேர்ந்த தீபா, 35, என்பவருக்கு, மார்ச் 8ம் தேதி 55 சவரன் நகைகளை, திருமண நிகழ்ச்சிக்காக கொடுத்துள்ளார். ஆனால் தீபா, 12 சவரன் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றினார். இது குறித்து பிரபாவதியின் புகாரை அடுத்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து தீபாவை நேற்று கைது செய்தனர்.
