UPDATED : ஆக 15, 2026 06:59 PM
ADDED : ஆக 15, 2026 06:52 PM
சென்னை: மாநில கிரிக்கெட் போட்டியில் தர்மபுரி அணியை வீழ்த்திய திண்டுக்கல் அணி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் 14 வயதுக்குட்பட்ட ஆடவர்களுக்கான மாநில அளவிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், திண்டுக்கல் அணியும், தர்மபுரி அணியும் மோதின.
இதில் 'டாஸ்' வென்ற தர்மபுரி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. திண்டுக்கல் அணியின் பந்துவீச்சில் சிக்கித் தவித்த தர்மபுரி அணி, 48 ஓவரில் 103 ரன் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு, தொடக்கமே சோதனையாக இருந்தது. முதல் இரண்டு வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
எனினும், அடுத்துவந்த வீரர்கள், நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அதனால் திண்டுக்கல் அணி 36 ஓவரில் 104 ரன் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
