/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைமுறைக்கு வராத 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' அதிருப்தி! சென்னை ஏர்போர்ட்டில் பயணியருக்கு அவஸ்தை
/
நடைமுறைக்கு வராத 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' அதிருப்தி! சென்னை ஏர்போர்ட்டில் பயணியருக்கு அவஸ்தை
நடைமுறைக்கு வராத 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' அதிருப்தி! சென்னை ஏர்போர்ட்டில் பயணியருக்கு அவஸ்தை
நடைமுறைக்கு வராத 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' அதிருப்தி! சென்னை ஏர்போர்ட்டில் பயணியருக்கு அவஸ்தை
ADDED : நவ 06, 2024 11:35 PM

சென்னை, :சென்னை விமான நிலையத்தில், 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' எனும் விரைவான குடியேற்ற சேவை திட்ட பணிகள் முடிந்தும் நடைமுறைக்கு வராததால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல், மிகவும் சிரமப்படுகின்றனர்.
நம்நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணியர், அங்கிருந்து இந்தியாவிற்கு வருவோர், 'இமிகிரேஷன்' எனும் குடியேற்றம் தொடர்பான நடைமுறையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இதில், பயணி எங்கிருந்து வருகிறார் என்பதும், அவரின் வருகை குறித்த விபரங்களும் பதிவு செய்யப்படும். இந்த நடைமுறை, உலகில் எங்கு சென்றாலும் பொருந்தும்.
இப்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரின் குடியேற்ற சேவைக்காக, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பயணியர் பலருக்கு, குறித்த நேரத்தில் வெளியேற முடியாமல் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிடுகிறது. இதனால், அவர்களின் திட்டமிட்ட பயணத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. .
இவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன் - டிரஸ்டட் டிராவலர் புரோக்ராம்' எனும், நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நாட்டிலேயே முதல் முறையாக, கடந்த ஜூனில் டில்லி விமான நிலையத்தில் துவங்கப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட முக்கிய ஏழு விமான நிலையங்களிலும் அதைத் தொடர்ந்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.
பதிவு செய்வது எப்படி
'பாஸ்ட் ட்ராக் இமிகிரேஷன்' திட்டத்தை பயன்படுத்த, பயணியர், www.ftittp.mha.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ - மெயில் மற்றும் மொபைல் போன் எண் விபரத்தை பதிவிட வேண்டும்.
தங்களின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். கைரேகை, முகப்படம் உள்ளிட்ட விபரங்களையும் இணைப்பது முக்கியம். கேட்கப்பட்ட விபரங்களை பதிவு செய்தவுடன், அதற்குரிய அடையாள எண், குறுஞ்செய்தி வாயிலாக மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த குறுந்தகவல், அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பர். போலி விபரங்கள், புகைப்பட மாற்றம், இருப்பிட விபரங்களில் மாற்றம் கண்டறியப்பட்டால், பதிவு செய்வது ரத்து செய்யப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பயணியர் அதிகம் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் இதற்கான பணிகள், சில மாதங்களாக நடந்தது. சர்வதேச வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில், புதிய கவுன்டர்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தும், நடைமுறைக்கு வராமல் இருப்பதால், பயணியர் பெரியளவில் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒரு மணி நேரம்
பயணியர் சிலர் கூறியதாவது:
துபாய், சிங்கப்பூர், அபுதாபி, சார்ஜா, மலே�யா உட்பட பல நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர்.
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் குடியுரிமை, சுங்க சோதனை முடிப்பது சவாலாக உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியேற, 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.
ஏற்கனவே, விமானத்தில் பயணம் செய்த களைப்பில் வருகிறோம். கூடுதலாக இமிகிரேஷனுக்காக காத்திருந்து வெளியேறுவது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. விரைவு குடியேற்ற சேவை திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்தில், பயணியர் குடியேற்ற சேவைகளை முடிப்பதற்கு, தனி கவுன்டர்கள் உள்ளன. இருப்பினும், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று முடிப்பதற்கு, கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது.
விரைவான குடியேற்ற சேவைக்காக, விமான நிலையத்தில் சர்வதேச வருகை, புறப்பாடு முனையங்களில், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நான்கு புதிய கவுன்டர்கள் அமைத்து தந்துள்ளோம். எங்கள் சார்பில் செய்துதரக்கூடிய பணிகள் முழுதும் முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடியுரிமை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைக்கான ஒப்புதல் வாங்கும் பணிக்காக, குடியுரிமை பணியகத்தின் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர்கள் உறுதி செய்த பின் தான் செயல்படுத்தப்படும்' என்றனர்.