/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் இருந்து விழுந்த அரசு பஸ் ஓட்டுநர் பலி
/
மாடியில் இருந்து விழுந்த அரசு பஸ் ஓட்டுநர் பலி
ADDED : செப் 13, 2025 12:43 AM
அம்பத்துார் வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அம்பத்துார், ஒரகடம், எஸ்.வி., நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 47. இவரின் மனைவி ரோஸ்மேரி, 44. போக்குவரத்து கழக ஊழியரான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தை இயக்கி வந்தார்.
இவர், வீட்டின் முதல் தளத்திற்கு சென்று, அப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில், நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, முதல் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்ட ரோஸ் மேரி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பின், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு ஜார்ஜ் பெர்னாண்டஸ் உயிரிழந்தார். இது குறித்து, அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.