/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரைவில் நிலம் எடுப்பு
/
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரைவில் நிலம் எடுப்பு
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரைவில் நிலம் எடுப்பு
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரைவில் நிலம் எடுப்பு
ADDED : ஏப் 24, 2025 12:27 AM
சென்னை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக, இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், 15.5 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த தடத்தில், நெடுஞ்சாலையின் மேம்பாலமும் அமைக்க இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் பிரச்னை நிலவியது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகளுடன், தமிழக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சில், இறுதி முடிவு எட்டப்பட்டது.
இதன்படி, சிறு திருத்தத்துடன் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் விரிவான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
விமான நிலையம், பல்லாவரம், தோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமிநகர், திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நிலையம் என, 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
மெட்ரோ ரயில்பாதை, மேம்பால பாதை, மெட்ரோ ரயில் பணிமனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 9,445 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையின்றி செல்வதற்கும், வெளிவட்ட சாலையுடன் இணைப்பதற்கும், தாம்பரம் அருகே சாய்வுப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த மேம்பாலச் சாலை, நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குள் வந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
இதற்கான அறிக்கை, கடந்த பிப்., 14ம் தேதி, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு, தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னயைின் முக்கிய இணைப்பாக இருக்கும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 14 - 15 மீட்டர் உயரத்தில் நெடுஞ்சாலையின் மேம்பால சாலையும், 18-20 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதையும் அமைகின்றன.
தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பாலங்கள் மற்றும் நடைமேம்பாலங்களில் தேவைக்கு ஏற்றார்போல், சில மாற்றங்களை செய்ய உள்ளோம். தேவைப்பட்டால், ஒரு பகுதியை இடித்து, பின்னர் மீண்டும் கட்டித்தரப்படும்.
அடுத்தகட்டமாக, இந்த திட்டத்துக்கு தேவையான 58 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளோம்.
தனியாரிடம் 28 ஏக்கர் நிலமும், அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து 30 ஏக்கர் நிலமும் தேவைப்படுகிறது. இதை கையகப்படுத்தும் பணியை விரைவில் துவங்க உள்ளோம்.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்படும். நிறுவனம் தேர்வு செய்து, பணி ஆணையை வழங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.