/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் 39 கடைகளை இடம் மாற்ற கடிதம்
/
ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் 39 கடைகளை இடம் மாற்ற கடிதம்
ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் 39 கடைகளை இடம் மாற்ற கடிதம்
ரயில் நிலையங்கள் அருகே டாஸ்மாக் 39 கடைகளை இடம் மாற்ற கடிதம்
ADDED : செப் 24, 2024 12:54 AM
சென்னை,
ரயில் நிலையங்கள் அருகே உள்ள 39 மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய கோரி, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்கள் மற்றும் நிலையங்களில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதற்கு, ரயில் நிலையங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
சில நேரங்களில் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கும் நபர், அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு, தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் சிக்கியது தெரியவந்தது.
மாதத்துக்கு 10 கல்வீச்சு சம்பவம் வழக்குகள் பதிவாகின்றன. இதற்கு, ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதே போல, குற்றங்களில் ஈடுபட்டு, பிடிபட்டவர்களில் பலர் குடிபோதையில் இருப்பது விசாரணையில் தெரியவந்ததது.
இதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலுார் மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் துாரத்துக்குள் உள்ள 39 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்களில் இருந்து 25 மீட்டர் முதல் 200 மீட்டருக்குள் தலா மூன்று கடைகள் அமைந்துள்ளன.
கிண்டி, ஜோலார்பேட்டை, முகுந்தராயபுரம், விரிஞ்சிபுரம், கொருக்குப்பேட்டை, அம்பத்துார் ரயில் நிலையங்கள் அருகில் தலா இரண்டு கடைகள் உள்ளன.
இதுதவிர, வியாசர்பாடி, சைதாப்பேட்டை, கஸ்துாரிபா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, திருவள்ளூர், திருவாலங்காடு ரயில் நிலையங்கள் அருகில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
விண்ணமங்கலம், காட்பாடி, லத்தேரி, ஊரப்பாக்கம், பழவந்தாங்கல், குரோம்பேட்டை, சானிட்டோரியம், திண்டிவனம், அத்திப்பட்டு, நந்திப்பாக்கம், அண்ணனுார், ஆவடி, இந்து கல்லுாரி ஆகிய ரயில் நிலையங்கள் அருகிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 11ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.