/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசை : 'கிச்சு கிச்சு' மூட்டி சிரிக்க வைத்த 'வீணையடி நீயெனக்கு' நாடகம்
/
மார்கழி இசை : 'கிச்சு கிச்சு' மூட்டி சிரிக்க வைத்த 'வீணையடி நீயெனக்கு' நாடகம்
மார்கழி இசை : 'கிச்சு கிச்சு' மூட்டி சிரிக்க வைத்த 'வீணையடி நீயெனக்கு' நாடகம்
மார்கழி இசை : 'கிச்சு கிச்சு' மூட்டி சிரிக்க வைத்த 'வீணையடி நீயெனக்கு' நாடகம்
ADDED : டிச 22, 2024 09:08 PM
ஸ்ரீவத்சனின் எழுத்து, இயக்கத்தில், 'டம்மீஸ் டிராமா' சார்பில் உருவாக்கப்பட்ட 'வீணையடி நீயெனக்கு' நாடகம், நாரத கான சபாவில், நடந்தது.
தன் காதலை, நிச்சயிக்கப்பட்ட திருமணம் போல் நடப்பதற்கு, நாயகன் செய்யும் தகிடுதத்தங்களே நாடகத்தின் கரு. நாயகன் கணேஷ்ராமாக பிரசன்னா கலக்கியிருக்கிறார். நாயகி ராகவியாக வந்த பவித்ராவும் சளைத்தவரில்லை.
மூன்றாண்டுகளாய் காதலிக்கும் இளசுகளுக்கு, திருமணம் என்று வரும் போது தான், நாயகியின் தந்தைக்கு காதல் என்ற வார்த்தையே ஆகாது என்கிற உண்மை உறைக்கிறது.
எனவே, தன் காதலியை மணமுடிக்க, வேலையைத் துறக்கும் கணேஷ், வேறோர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, தன் சித்தப்பா உதவியுடன் நாயகியை முறைப்படி பெண் கேட்டு, அவளை மணம் முடிக்கிறான்.
மணமக்கள் இருவரும் காதலர்கள் என்பது, இறுதி வரை நாயகியின் தந்தைக்கு தெரியாமலேயே திருமணம் களேபரமாக நடந்தேறுகிறது.
மொத்தம் 14 காட்சிகள். 100 நிமிடங்கள. ஆனால், இறுதி காட்சி வரை, மனதை 'கிச்சு கிச்சு' மூட்டி, கைகளைத் தாளம் போட வைத்ததால், அரங்கத்தில் சிரிப்பலை ஒலித்துக்கொண்டே இருந்தது.
நாயகன், அம்மா கல்யாணியாக நித்யா, அப்பா வெங்கட்டாக ஸ்ரீதர், சித்தப்பா கிருஷ்ணாவாக பாஸ்கர் ஆகியோர் வரும் காட்சிகள், மேடையை கலகலப்பாக்குகின்றன.
'வேலைய ரிசைன் பண்ணனும்ணு அப்டி என்ன வைராக்கியம் உனக்கு', 'வில்லி மாதிரி பேசாத, என்னோட அம்மா மாதிரி பேசு' என, காட்சியின் தன்மைக்கு ஏற்ப, காமெடியை உச்சம் தொட வைக்கின்றன வசனங்கள் ஒவ்வொன்றும்.
மகனின் திருமணம் தொடர்பாக, அப்பா வெங்கட் காணும் கனவில் நயன்தாராவின் 'நெட் பிளிக்ஸ்' கல்யாணம், திருமணம் சாதகமாக நடக்க, மகனின் ஜாதகத்தை மாற்றும் அம்மா கல்யாணி என, கதாபாத்திரங்கள் அரங்கத்தை குலுங்கச் செய்கின்றன.
ஒரு காதல் திருமண கதைக்குள், குடும்ப 'சென்டிமென்ட்' கலந்து, வசனங்களில் 'காமெடி' வாசனையை அதிகம் துாவி, சிரிக்க சிரிக்க வழியனுப்பி வைக்கிறது 'வீணையடி நீயெனக்கு' நாடகம்.

