ADDED : ஆக 29, 2025 12:19 AM

மீன் சந்தையில்
காயங்களுடன்
வாலிபர் உடல்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேம், 30. இவர், வானகரம் மீன் அங்காடியின் மாடியில் தங்கி, மீன் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் மாடியில் துாங்கிக் கொண்டிருந்தவர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அயப்பாக்கம்
காவல் நிலையம்
இன்று திறப்பு
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, அயப்பாக்கம் காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அயப்பாக்கம் பிரதான சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட அயப்பாக்கம் காவல் நிலையம் இன்று காலை திறக்கப்படுகிறது.
புதுமாப்பிள்ளை
துாக்கிட்டு
தற்கொலை
மாடம்பாக்கம், லலிதா நகரைச் சேர்ந்த ரூபேஷ்குமார், 28. ஜூலை மாதம் ரூபேஷ்குமாருக்கும், சுவாதி, 22, என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆடி மாதம் சுவாதி அவரது தாய் வீட்டிற்கு சென்றார். ஆடி மாதம் முடிந்த நிலையில், கணவர் வீட்டிற்கு சுவாதி வருவதற்கு தாமதமாகியுள்ளது. இதனால் விரக்தியடைந்தனர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 நாட்கள்
டிரோன்கள்
பறக்க தடை
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், செப்., 2ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இரவு கிண்டி ராஜ்பவனில் தங்கும் அவர், மறுநாள் விமானத்தில், சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம், ராஜ்பவன், குடியரசு தலைவர் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் மட்டுமின்றி, எந்தவிதமான பறக்கும் பொருட்களும் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளன.
மிளகாய் பொடி
துாவி செயின்
பறிக்க முயற்சி
முகப்பேர், ட்ரினிட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார், 62. இவரது வீட்டிற்கு நேற்று மதியம் 1:45 மணியளவில் வந்த, பெண் ஒருவர், தன்னை வீட்டு வேலைக்கு வேலை அழைத்ததாக கூறி பேச்சு கொடுத்தப்படியே, மிளகாய் பொடியை சுகுமாரின் முகத்தில் வீசி, அவரது செயினை பறிக்க முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அப்பெண்ணை பிடித்து ஜெ.ஜெ நகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மல்லிகா, 50, என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்தனர்.
லிப்டில் சிக்கி
தவித்த பெண்கள்
சென்னை, ஆக. 29-
மூலக்கொத்தளம், ராமதாஸ் நகரில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1,440 வீடுகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 'லிப்ட்' நேற்று முன்தினம் நள்ளிரவு, பழுதாகி நடுவழியில் நின்றுள்ளது. அதில் இருந்த இரு பெண்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தினர் லிப்டின் கதவை உடைத்து, இரு பெண்களையும் பத்திரமாக மீட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால், லிப்ட் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக, அந்த குடியிருப்பு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
400 இட்லி
பாத்திரங்கள்
திருட்டு
புளியந்தோப்பு, கெனால் தெருவைச் சேர்ந்தவர் தமிழ் அன்சாரி, 38. இவர், புளியந்தோப்பு பொன்னப்பன் தெருவில், பாத்திரங்களுக்கு மெருகேற்றும் பணி செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், கொருக்குப்பேட்டையில் இருந்து, 1,100 இட்லி பாத்திரங்களை மெருகேற்ற வாங்கி வைத்திருந்தார். தந்தை இறந்து விட்டதால், அவர் பணிக்கு செல்லவில்லை. இதையறிந்த மர்ம நபர்கள், பட்டறைக்குள் புகுந்து, 400 இட்லி பாத்திரங்களை திருடிச் சென்றனர். பேசின்பாலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.